மைசூரை பொறுத்தவரை, பெரும்பாலான இடங்களில் காங்கிரஸ் கூட்டணிக்கும், மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கும், ஆதரவு இருப்பதாக ஏபிபி சி வோட்டர் கருத்துக்கணிப்பு கூறுகிறது.


கர்நாடக தேர்தல்


கர்நாடகா சட்டமன்ற தேர்தல் வரும் மே 10 ஆம் தேதி நடைபெறும் நிலையில் தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடித்து வருகின்றன. நாளையுடன் பிரச்சாரங்கள் ஓயும் நிலையில் தொடர்ந்து கடந்த சில வாரங்களாக கர்நாடக மாநிலம் பரபரப்பான சூழலை எட்டியுள்ளது. தாமதிக்காமல் 13 ஆம் தேதியே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால், அதற்கு முன்னோட்டமாக இந்தாண்டு நடைபெறும் பல மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்கள் கருதப்படுகின்றன. 



ஓயும் விறுவிறுப்பான தேர்தல் பிரசாரம் 


இதில் மிக முக்கியமானது கர்நாடகா சட்டமன்ற தேர்தல். ஏனெனில் தென்னிந்தியாவை பொறுத்தவரையில் பாஜக ஆளும் ஒரே மாநிலம் கர்நாடகம் என்பதால் இந்த தேர்தல் பா.ஜ.க.வை பொறுத்தவரை மிகவும் முக்கியமான தேர்தலாக கருதப்படுகிறது. மேலும் இந்தியா முழுமைக்குமான அரசியல் விவகாரங்கள் தென்னிந்தியாவில் பாதிக்கும் ஒரே மாநிலமாக கர்நாடக இருப்பதால் இரு கட்சிகளும் கவனமாகவே காய்களை நகர்த்தி வந்தன. இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக கர்நாடக மாநிலத்தில் தேர்தல் களைகட்டியது. முக்கிய பாஜக தலைவர்கள், பிரதமர் மோடி, அமித் ஷா, யோகி என எல்லோரும் குவிய, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் காங்கிரஸ் சார்பில் மறுபுறமும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், யாருக்கு வெற்றி கிடைக்கும் என்ற கேள்வி ஒட்டுமொத்த இந்தியர்கள் மனதிலும் ஓடிக்கொண்டிருந்தது.


தொடர்புடைய செய்திகள்: Karnataka Opinion Poll: கர்நாடகாவில் எந்த மண்டலத்தில் "கை" ஓங்கும்? "தாமரை" மலரும்? ஏபிபி சி வோட்டர் கருத்துக்கணிப்பு..!


ஏபிபி - சி வோட்டர் கருத்துக்கணிப்பு


இதனிடையே சமூக பொருளாதாரம் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் சி வோட்டர் நிறுவனமும், நமது ஏபிபி செய்தி நிறுவனமும் இணைந்து தேர்தலுக்கு முந்தைய  கருத்துகணிப்பை நடத்தியுள்ளது. அதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த கருத்துக்கணிப்பு ஏப்ரல் 29 ஆம் தேதி முதல் மே 5 ஆம் தேதி வரை ஒரு வாரம் எடுக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 6420 பேரிடம் நடத்தப்பட்ட கருத்துகணிப்பு எடுக்கப்பட்டுள்ளது. அதில் இந்த தேர்தலில் 40.2 சதவிகித வாக்குகளை பெற்று எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் இதில் பகுதிவாரியாக யார் முன்னிலை பெறுகிறார்கள் என்பதுதான் மிகவும் அவசியமாகிறது. 



மைசூரு நிலவரம் என்ன?


மைசூரை பொறுத்தவரை, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகியவை ஆதிக்கம் செலுத்தும் என்று கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது. பெரும்பாலான இடங்களில் காங்கிரஸ் கூட்டணிக்கும், மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கும், ஆதரவு இருப்பதாக ஏபிபி சி வோட்டர் கருத்துக்கணிப்பு கூறுகிறது. காங்கிரஸ் கூட்டணியின் வாக்கு சதவிகிதம் அப்படியே இருந்தாலும், பாஜக இங்கு பெருமளவு சறுக்கியுள்ளது. இந்த பகுதி மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் கோட்டையாக இருந்து வந்தது. ஆனால் இம்முறை காங்கிரஸ் கட்சியுடன் கிட்டத்தட்ட சமமாக வந்துள்ளது. கடந்த முறை 38 சதவிகித வாக்குகளைப் பெற்று 27 இடங்களை அந்த பகுதியில் கைப்பற்றி இருந்தது மதச்சார்பற்ற ஜனதா தளம். காங்கிரஸ் 17 இடங்களை வென்று இருந்தது. ஏபிபி சி வோட்டர் கருத்துக்கணிப்பில், மைசூரு பகுதியில் காங்கிரஸ் கூட்டணி இம்முறை 34.8 சதவிகித வாக்குகளை பெறும் என்றும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 33 சதவிகித வாக்குகளை பெற்று 2வது இடத்தையும், பாஜக 25.1 சதவிகித வாக்குகளுடன் 3வது இடத்தை பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறையை விட இம்முறை காங்கிரஸ் கூட்டணி 0.8 சதவிகிதம் அதிகமாகவும், பாஜக 8.1 சதவிகிதம் அதிகமாகவும் பெரும் எனக் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. பாஜக கடந்த முறையை விட இம்முறை அதிக வாக்குகள் பெற்றாலும் வாக்குகள் சிதறும் பட்சத்தில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் முன்னிலை பெறுகின்றன. அதாவது காங்கிரஸ் கூட்டணி 24 முதல் 28 சீட்டுகளும்,பாஜக 4 முதல் 8 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 19 முதல் 23 சீட்டுகள் வரை பெறலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இங்கு மொத்தம் 55 இடங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.