கர்நாடகா சட்டமன்ற தேர்தல் மே 10 ஆம் தேதி நடக்கவுள்ள நிலையில், அங்கு அடுத்த முதலமைச்சராக யார் வர வாய்ப்புள்ளது என்பது பற்றி காணலாம். 


எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சட்டமன்ற தேர்தல்:


வரும் மே 10 ஆம் தேதி  கர்நாடகாவில் உள்ள 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தென்னிந்தியாவை பொறுத்தவரையில் பாஜக ஆளும் ஒரே மாநிலம் கர்நாடகம் என்பதால் இந்த தேர்தல்  பாஜகவை பொறுத்தவரை முக்கியமான தேர்தலாகும். அதேசமயம் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியும் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முயற்சிப்பதால் இந்த தேர்தல் பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ளது. 


மேலும் 2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில்  பல்வேறு மாநிலங்களில் நடப்பாண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தல்கள் மிக முக்கிய பங்கை வகிக்கிறது. அதில் கர்நாடகா மாநில சட்டமன்ற தேர்தலும் ஒன்று. இப்படியான நிலையில் அங்கு வாக்குப்பதிவுக்கு இன்னும் 4 நாள்களே உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.  பதிவாகும் வாக்குகள் மே 13 ஆம் தேதி எண்ணப்படுகிறது. 


பாஜகவில்  பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள்  ஒருபுறமும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்காகாந்தி முழு வீச்சில் பிரச்சாரம் செய்து வருவதால் அம்மாநிலமே களைக்கட்டியுள்ளது. 


கருத்துக்கணிப்பு  முடிவுகள் 


இதற்கிடையில் சமூக பொருளாதாரம் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் சி வோட்டர் நிறுவனமும், நமது ஏபிபி செய்தி நிறுவனமும் இணைந்து தேர்தலுக்கு முந்தைய  கருத்துகணிப்பை நடத்தி முடித்துள்ளது. ஏப்ரல் 29 ஆம் தேதி முதல் மே 5 ஆம் தேதி வரை எடுக்கப்பட்ட இந்த கருத்துக்கணிப்பானது மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 6420 பேரிடம் எடுக்கப்பட்டுள்ளது. 


இப்படியான நிலையில் கர்நாடகாவில் அடுத்து ஆட்சி அமைக்க போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக எழுந்துள்ளது. தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள் எதிர்க்கட்சியான காங்கிரசுக்கு சாதகமாக அமைந்துள்ளது. அக்கட்சி இந்த தேர்தலில் 40.2 சதவிகித வாக்குகளை பெற்று ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அடுத்த முதலமைச்சராக யாருக்கு வாய்ப்பு? 


கர்நாடகாவில் தற்போது பாஜக அரசு சிறப்பாக இருப்பக்கிறதா? என்ற கேள்விக்கு மோசம் என 49.5 சதவிகிதம் பேரும், 29.4 சதவிகிதம் சிறப்பாக உள்ளது என்றும், 21.1 சதவிகிதம் பேர் பரவாயில்லை எனவும் கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளனர். இதேபோல் அங்கு தற்போதைய முதலமைச்சர் பசவராஜ் பொம்மையின் செயல்பாடு எப்படி உள்ளது? என்ற கேள்விக்கு 49.8 சதவிகிதம் பேர் மோசம் எனவும், சிறப்பாக உள்ளது என 26.2 சதவிகிதம் பேரும், பரவாயில்லை என 24 சதவிகிதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். 


மேலும் அடுத்த முதலமைச்சராக யார் தேர்வு செய்யப்படுவார்கள்? என்ற கேள்விக்கு சித்தராமையாவுக்கு (காங்கிரஸ்) 42.3 சதவிகிதம் பேரும், பசவராஜ் பொம்மைக்கு (பாஜக) 30.6 சதவிகிதம் பேரும், குமாரசாமி (மதச்சார்பற்ற ஜனதா தளம்) வர 20.4 சதவிகிதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.