டிஎன்பிஎஸ்சியின் தரப்பில் தேர்வர்களுக்கு உகந்த, வெளிப்படையான மற்றும் விரைவான முடிவுகளை வழங்குவதற்கான கொள்கை மாற்றங்களைச் செய்து வருவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.


தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அரசுத் துறைகளில் ஏற்படும் காலி இடங்களை நிரப்ப, போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இவற்றை டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்  நடத்தி வருகிறது.


தொடர் புகார்க் குரல்கள்


ஆணையத்தின் தலைவராக இருந்த பாலச்சந்திரன் கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஓய்வு பெற்றார். அதற்குப் பின்பு 2 ஆண்டுகளாக தலைவர் பதவி நிரப்பப்படாமல் இருந்தது. இதற்கிடையே டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 2, குரூப் 4 உள்ளிட்ட தேர்வுகளின் அறிவிக்கைகள், தேர்வு, தேர்வு முடிவுகள் ஆகியவற்றை அறிவிப்பதில் தாமதம் ஏற்படுவதாகத் தொடர்ந்து புகார்க் குரல்கள் எழுந்தன.


உறுதி அளித்த டிஎன்பிஎஸ்சி தலைவர் 


இந்த நிலையில், 2 ஆண்டுக்குப் பிறகு ஆகஸ்ட் மாதம் எல்.கே.பிரபாகர் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டார். அவர் பதவியேற்கும்போது, ’’டிஎன்பிஎஸ்சி இனி வெளிப்படையாகச் செயல்படும். தேர்வு அறிவிப்புகள், முடிவுகள் குறித்த தகவல்கள் உடனுக்குடன் வெளியிடப்படும். இனி காலதாமதம் இல்லாமல், விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று உறுதி அளித்திருந்தார்.


அதை மெய்ப்பிக்கும் வகையில், போட்டித் தேர்வுகளின் அறிவிக்கை, தேர்வு, தேர்வு முடிவுகள் ஆகியவை முடிந்த அளவுக்கு வேகப்படுத்தப்பட்டுள்ளது.


இதையும் வாசிக்கலாம்: சபாஷ்: போட்டித் தேர்வுகள், வெற்றிபெற்றோரின் விவரங்களை வெளிப்படையாக வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி- விவரம்!  


டிஎன்பிஎஸ்சி எக்ஸ் பக்கம்


முன்னதாக, ஆணையம் பெயரில் எக்ஸ் பக்கம் தொடங்கப்பட்டது. இதில், ஆணையத்தின் அறிவிப்புகள் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.






இந்த நிலையில், ஒரு வாரத்துக்கு உள்ளாகவே சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி இன்று தெரிவித்துள்ளது. நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்புகள் 6 வேலை நாட்களுக்கு உள்ளாக நடைபெற்றுள்ளன.


இதனால் அரசுப் பணிகளுக்குத் தயாராகி வரும் தேர்வர்களும் அரசு வேலைகளுக்காகக் காத்திருக்கும் மாணவர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர். 


இதையும் வாசிக்கலாம்: TNPSC Answer Key: அடடே.. நடத்திய அத்தனை தேர்வுக்கும் 1 வாரத்துக்குள் விடைக் குறிப்பு- டிஎன்பிஎஸ்சி அசத்தல்!