தமிழகத்திலேயே முதல் மதிப்பெண் பெற்ற மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த பார்வை குறைபாடு உடைய மாணவனை திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் நேரில் சென்று பாராட்டி நிதியுதவி வழங்கி மேற்படிப்பிற்காக அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்துள்ளனர்.
12 -ஆம் வகுப்பு பொதுத்தேர்வு
2024- 25 ஆம் கல்வி ஆண்டுக்கான தமிழக பள்ளிக் கல்வி வாரியத்தின் 12 -ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளானது நேற்று முன்தினம் வெளியானது. மாநிலக் கல்வி வாரியத்தின்கீழ் 12 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை 7 லட்சத்து 92 ஆயிரத்து 494 மாணவ, மாணவிகள் எழுதினர். இதில் 7 லட்சத்து 53 ஆயிரத்து 142 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாநில தேர்ச்சி விபரம்
12 -ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 95.03% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகமாகியுள்ளன. மாணவர்கள் 93.16 சதவிகிதமும் மாணவிகள் 96.70 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
Marco Rubio: சமரசம் செய்ய மீண்டும் ஆஃபர் கொடுத்த அமெரிக்கா - இந்தியாவின் தரமான பதில் என்ன தெரியுமா.?
மயிலாடுதுறை மாவட்டம் விபரம்
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.25 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்ட முழுவதும் மாணவர்கள் 4 ஆயிரத்து 633 பேரும், மாணவிகள் 5 ஆயிரத்து 419 பேரும் என மொத்தம் 10 ஆயிரத்து 52 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 4 ஆயிரத்து 218 மாணவர்களும், 5 ஆயிரத்து 155 மாணவிகளும் என 9 ஆயிரத்து 373 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 93.16 சதவீதமும், மாணவிகள் 96.70 சதவீதம் என வழக்கம்போல் பெண் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர் . மாணவர்களை விட மாணவிகள் 3.54 சதவீதம் அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாநில அளவில் மயிலாடுதுறை மாவட்டம் 33 வது இடத்தை பெற்றுள்ளது.
மாநில அளவில் முதலிடம்
மயிலாதுறை மாவட்டம் சீர்காழி அருகே கேவரோடை கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்தாஸ், சரளா தம்பதியினர். இவர்களுக்கு அரவிந்த், ஆனந்த் இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் அரவிந்த் இளநிலை பட்டப்படிப்பு முடித்துள்ளார். இளைய மகன் ஆனந்த் பார்வை குறைபாடு உள்ளவர் ஆவார். இதன்காரணமாக இவர் சென்னை பூந்தமல்லியில் உள்ள பார்வை குறைபாடு உடையோருக்கான சிறப்பு அரசு மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
எம்எல்ஏக்கள் நேரில் சென்று பாராட்டு
இந்நிலையில் நேற்று முன்தினம் வெளியான 12 வகுப்பு தேர்வில் 600 -க்கு 486 மதிப்பெண்கள் பெற்று தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளார். இதை அறிந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் மயிலாடுதுறை மாவட்ட செயலாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம் முருகன் நேரில் சென்று 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவித்தொகை வழங்கி பாராட்டு தெரிவித்தார். மேலும் மாணவரின் மேற்படிப்புக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் கண்டிப்பாக செய்து தருகிறோம் என்று உத்தரவாதம் அளித்தார்.
இதேபோன்று மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகனுடன் சென்ற சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் அவரது தொகுதி மாணவரான ஆனந்திற்கு 10 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கி பாராட்டினார். இந்நிகழ்வில் சீர்காழி ஒன்றிய செயலாளர்கள் பஞ்சு குமார், பிரபாகரன், மலர்விழி திருமாவளவன், நகர செயலாளர் சுப்பராயன் உள்ளிட்ட திமுகவினர் பலர் உடன் இருந்தனர்.