11, 12ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்களை செப்டம்பர் 15-ம் தேதி முதல் பெற்றுக்கொள்ளலாம் என்று அரசுத்  தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.


மாணவர்கள் பள்ளிகள் வாயிலாகவும், தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்கள் வாயிலாகவும் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து அரசுத்  தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ’’மே 2022, மேல்நிலை இரண்டாம்‌ ஆண்டு பொதுத்‌ தேர்வெழுதிய தேர்வர்களுக்கு (மறுகூட்டல்‌ மற்றும்‌ மறுமதிப்பீடு முடிவு உட்பட), மேல்நிலை முதலாம்‌ ஆண்டு மற்றும்‌ இரண்டாம்‌ ஆண்டு அசல்‌ மதிப்பெண்‌ சான்றிதழ்கள்‌ / மதிப்பெண்‌
பட்டியல்‌ 15.09.2022 அன்று முதல்‌ வழங்கப்படும்‌. 


பள்ளி மாணவர்கள்‌ தாங்கள்‌ பயின்ற பள்ளி வாயிலாகவும்‌, தனித் தேர்வர்கள்‌ தாங்கள்‌ தேர்வெழுதிய தேர்வு மையம் ‌வாயிலாகவும்‌ அசல்‌ மதிப்பெண்‌ சான்றிதழ்களை (Original Mark Certificates) / மதிப்பெண்‌ பட்டியலினை (Statement Of Mark) பெற்றுக்கொள்ளலாம்‌. மேலும்‌, விவரங்களை https://dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில்‌ அறிந்து கொள்ளலாம்’’‌ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


பின்னணி என்ன?


கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பொதுத்தேர்வுகள் நடத்த முடியாமல் போனது. தற்போது கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால், இந்தாண்டு அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் நடத்தப்பட்டன. குறிப்பாக 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.


இதில் பொதுத் தேர்வுகள் மே மாதம் தொடங்கி, அதே மாதத்தில் முடிவடைந்தன. 10, 11, 12 ஆகிய 3 வகுப்புக்கான பொதுத் தேர்வுகளையும் சுமார் 26 லட்சம் மாணவர்கள் எழுதினர்.


12ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத்தேர்வு ஏப்ரல் 25ம் தேதி தொடங்கியது. மே 5 முதல் மே 28 வரை பொதுத்தேர்வு நடைபெற்றது.  ஜூன் 23ஆம் தேதி அவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட வாய்ப்புள்ளது. பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9 முதல் மே 31ம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெற்றது. ஜூலை 7ல் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மே 5ஆம் தேதி தொடங்கி மே 28ஆம் தேதி தேர்வு முடிவடைந்தது. இதனிடையே பொதுத்தேர்வு விடைத்தாள்களைத் திருத்தும் பணி ஜூன் 1 ஆம் தேதி தொடங்கியது. இந்த விடைத்தாள்கள் முடிக்கும் பணி ஜூன் 9 ஆம் தேதி நிறைவடைந்தது. 




மாறிய தேதிகள்


10 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் ஜூன் 17ஆம் தேதியும், 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 23ஆம் தேதியும், 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 7ஆம் தேதியும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.


இந்த நிலையில் 10 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் தள்ளி வைக்கப்பட்டன.  12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் முன்கூட்டியே வெளியாகின. இரண்டு தேர்வு முடிவுகளும் ஜூன் 20ஆம் தேதி வெளியாகின.


ALSO READ | Arts Science College Syllabus: கலை, அறிவியல் கல்லூரிகளிலும் புது பாடத்திட்டம்; சென்னை- மெல்போர்ன் பல்கலை. இடையே ஒப்பந்தம்- அமைச்சர் பொன்முடி