கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள வெள்ளாங்கோடு கரிங்க வளாகம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 52). இவர் தனியார் வாகனம் ஓட்டி வந்தார். இவரது மனைவி ராஜேஸ்வரி (46). இவர்களது மகள் நித்யா (22). கடந்த ஆண்டு நித்யாவுக்கு திருமணம் நடந்தது. அவரது கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நித்யாவுக்கும் அவரது கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் நித்யா கணவரை பிரிந்து தனது பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார். கடந்த 2 மாதமாக அவர் தாய் வீட்டில் வசித்து வந்தார். மேலும் கணவரிடம் விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கும் தாக்கல் செய்துள்ளார். இதனால் கிருஷ்ணன் மன வேதனை அடைந்தார். இதற்கிடையில் அவரது மனைவி ராஜேஸ்வரிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதுவும் கிருஷ்ணனுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. இது பற்றி மனைவி ராஜேஸ்வரியிடமும் கூறி உள்ளார். அதன்பிறகு இரவு 3 பேரும் வீட்டில் படுத்து தூங்கினர்.

 

காலை அவர்களது வீட்டின் மேல் மாடியில் வசிக்கும் கிருஷ்ணனின் தாயார் வள்ளியம்மா கீழே இறங்கி வந்து பார்த்தபோது, கிருஷ்ணன் வீட்டு கதவு பூட்டாத நிலையில் காணப்பட்டது. இதனால் அவர் மகனை அழைத்துப் பார்த்தார். ஆனால் வீட்டுக்குள் இருந்து யாரும் பதில் அளிக்கவில்லை. எனவே அவர் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு கிருஷ்ணன், ராஜேஸ்வரி, நித்யா ஆகியோர் பிணமாக கிடந்து உள்ளனர். 3 பேரும் விஷம் குடித்து தற்கொலை செய்திருப்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வள்ளியம்மா அலறி கூச்சல் போட்டு உள்ளார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் அருமனை போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் சம்பவம் இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.

 



 

தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு கணேசன் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினார். அப்போது வீட்டில் கிருஷ்ணன் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில் கடன் தொல்லை மற்றும் மகளின் வாழ்க்கை ஆகியவற்றால் மன வேதனை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து கஷ்டங்கள் வருவதால் சாவது என முடிவு செய்தோம். எங்களது உடல்களை குடும்பத்திற்கு சொந்தமான ½ சென்ட் நிலத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து 3 பேர் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்த சம்பவம் வெள்ளாங்கோடு கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கிராம மக்கள் அனைவரும் கிருஷ்ணன் வீட்டின் முன்பு கூடி சோகத்தில் நின்றனர்.

 


Suicidal Trigger Warning


வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)