மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத்தையே கூண்டோடு கலைத்து இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தேர்வாணைய ஊழியர்கள் தேவையுள்ள பிற துறைகளுக்கு மாற்றப்படுவார்கள் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்கு கூறும்போது, ''கடந்த 3 ஆண்டுகளாக குறிப்பிட்ட சில, தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு ஆவணங்கள் கசிய விடப்பட்டதையும் விற்கப்பட்டதையும் துறை ரீதியான விசாரணை மற்றும் உளவுத்துறை அறிக்கைகள் சுட்டிக் காட்டியுள்ளன. அதேபோல சமீபத்தில் நடத்தப்பட்ட தேர்வுகள் தொடர்பாகவும் புகார்கள் வந்துள்ளன.

இதைத் தொடர்ந்து இமாச்சலப் பிரதேச அரசுப் பணியாளர் ஆணையத்தை உடனடியாகக் கலைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. தேர்வாணைய ஊழியர்கள் தேவையுள்ள பிற துறைகளுக்கு மாற்றப்படுவார்கள்'' என்று முதல்வர் தெரிவித்துள்ளார். 

பின்னணி என்ன?

இமாச்சலப் பிரதேச அரசு சார்பில் இளநிலை அலுவலக உதவியாளர்கள் (junior office assistants) பதவிக்கான தேர்வுத் தாள் கடந்த டிசம்பர் மாதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து இதற்கான ஆட்தெரிவு நடைமுறை ஒத்தி வைக்கப்பட்டது. 

இமாச்சலப் பிரதேச பணியாளர் தேர்வு ஆணையம் (Himachal Pradesh Staff Selection Commission -HPSSC) கலைக்கப்பட்டதை அடுத்து, தற்போதைய ஆட்சேர்ப்பு பணிகள், சிம்லாவில் உள்ள இமாச்சலப் பிரதேச அரசு தேர்வு ஆணையத்துக்கு (Himachal Pradesh Public Service Commission - HPPSC) மாற்றப்படும் என்றும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் வரை அல்லது புதிய ஆணையம் அமைக்கப்படும் வரை இதே நிலை தொடரும் என்றும் இமாச்சலப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது.

இதையும் வாசிக்கலாம்: TN 10th Exam: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான பெயர் பட்டியல்: இன்று முதல் திருத்தம் செய்யலாம்.. https://tamil.abplive.com/education/tamil-nadu-10th-public-exam-name-list-correction-dge-notice-102865/amp

10ஆம் வகுப்புக்கான தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய அனைத்து பாடங்களின் மாதிரி வினாத் தாளைக் காண: https://tamil.abplive.com/topic/question-bank/amp என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.