தஞ்சாவூர்: 141 அரசு உதவிபெறும் பள்ளிகளில் 10,870 மாணவ, மாணவிகள் முதல்வரின் விரிவாக்கப்பட்ட காலை உணவுத் திட்டத்தில் பயன்பெறுகின்றனர் என தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். 


இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம்  தெரிவித்துள்ளதாவது: தமிழக முதல்வரால் கடந்த 15.09.2022 அன்று முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் அரசு தொடக்கப்பள்ளியில் பயிலும் 1 முதல் 5 வகுப்பு வரை பயிலக்கூடிய அனைத்து மாணவ மாணவிகளுக்கும் காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. மேலும் மாணவர்களுடன்  முதல்வர் உணவருந்தினார். இத்திட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் 1087 பள்ளிகள் 50865 துவக்கப்பள்ளி  மாணவிகளும், நகர்புற பகுதிகளில் 62 பள்ளிகளில் 5158 துவக்கப்பள்ளி மாணவ மாணவிகளும் என மொத்தம் 1149 பள்ளிகளில் 56023 துவக்கப் பள்ளி மாணவ, மாணவிகள் இத்திட்டத்தில் பயன் பெற்று வருகிறார்கள்.


விரிவுப்படுத்தப்பட்ட காலை உணவு திட்டம்


தற்போது  தமிழ்நாடு முதல்வரால் கடந்த 15.07.2024 அன்று தொடங்கி வைக்கப்பட்ட விரிவுப்படுத்தப்பட்ட முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் 141 அரசு உதவிபெறும் பள்ளிகளில் 10,870 மாணவ, மாணவிகள் காலை உணவுத் திட்டத்தின் மூலம் பயன்பெறுகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.




திருக்கானூர்பட்டி பள்ளி தலைமை ஆசிரியை நன்றி


இத்திட்டத்தில் பயனடைந்த பயனாளிகள் குறித்து திருக்கானூர்பட்டி தூயமரியன்னை அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை  குளோரியா கூறியதாவது:


எங்கள் பள்ளியில் மாணவர்கள் 69 பேர், மாணவிகள் 72 பேர் என்று மொத்தம் 141 பேர் காலை உணவு சாப்பிடுகின்றனர். இத்திட்டத்தின்படி மாணவ, மாணவிகள் பள்ளியில் காலை உணவு சாப்பிடுவது எங்களுக்கு மகிழ்ச்சியைத் அளிக்கிறது. வேலைக்கு செல்லும் பெற்றோர் காலையில் டீ, பிஸ்கட் மட்டும் கொடுத்துவிட்டு பள்ளிக்கு அழைத்து வருவார்கள்.


தற்போது காலை உணவுத் திட்டத்தால் மாணவ, மாணவிகள் அனைவரும் சாப்பிடுகிறார்கள். படிப்பில் பசியின்றி முழுகவனம் செலுத்துகிறார்கள். சிறப்பான இத்திட்டம் தந்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி. இவ்வாறு அவர் தெரிவித்தார். 


மாதாக்கோட்டை பள்ளியில் 167 மாணவர்கள் பயன்


மாதாக்கோட்டை தூயமரியன்னை அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மரியன்னாவிர்ஜூன் கூறியதாவது:


எங்கள் பள்ளியில் மாணவர்கள் 98,  மாணவிகள் 69 என மொத்தம் 167 மாணவ, மாணவிகள் காலை உணவு சாப்பிடுகிறார்கள். வேலைக்குப் போகும் பெற்றோர் இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக தெரிவித்துள்ளார்கள். வீட்டில் சாப்பிடாமலேயே பள்ளிக்கு வருகிற பிள்ளைகள் தற்போது காலை உணவுத் திட்டத்தால் சத்தான உணவினை சாப்பிடுகிறார்கள். இதனால் அவர்களுக்கு பாடத்தில் முழுமையான கவனம் செலுத்த இயல்கிறது. கல்விப்புரட்சியில் சிறந்த திட்டத்தை தந்த முதலமைச்சருக்கு மிகவும் நன்றி. இவ்வாறு அவர் தெரிவித்தார். 


முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தால் பயன்பெறும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் அபிதா, சுசீலா, ஜான்சிராணி மோசஸ் ஆகியோர் கூறுகையில், காலை உணவுத் திட்டத்தால் குழந்தைகளுக்கு சாப்பாடு தந்து பசிப்பிணி போக்கிய முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர்.


இவ்வாறு தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம், பள்ளிக் கல்வித்துறையுடன் இணைந்து தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.