வீட்டுக்கு திருட வந்த கொள்ளையன், வீட்டின் உரிமையாளர் வந்ததால் பயந்து கீழே விழுந்து கை காலை உடைத்துக் கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.


தொடர்ந்து பொதுமக்கள் கொள்ளை ஆசாமியை சுற்றிவளைத்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.


சென்னை, அயனாவரம், மேடவாக்கம் 2ஆவது தெருவில் வசித்து வருபவர் சுந்தர் (வயது 41). இவர், நேற்று முன்தினம் (செப்.18) இரவு உணவு அருந்திவிட்டு தனது குடும்பத்தினருடன் தன் வீட்டின் தரைத்தளத்தில் தூங்கியுள்ளார்.


இந்நிலையில், நேற்று (செப்.19) அதிகாலை 3 மணிக்கு வீட்டின் முதல் தளத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நுழைந்துள்ளார். மேலும், ஜன்னல் கண்ணாடியை உடைத்து உள்ளே நுழைந்து திருட முயன்றுள்ளார்.


இச்சூழலில் நல்வாய்ப்பாக பக்கத்து வீட்டினர் இதனை கவனித்துவிட்ட நிலையில், சுந்தரை செல்போனில் உடனடியாகத் தொடர்புகொண்டு இது குறித்து தெரிவித்துள்ளார்.


தொடர்ந்து, சுந்தர் உடனே சுதாரித்து முதல் தளத்துக்குச் சென்று பார்த்தபோது, அவரைப் பார்த்த திருட்டு நபர் அச்சத்தில் கீழே குதித்து தப்ப முயன்றுள்ளார்.


இதில், அவரது காலில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், தப்ப முடியாமல் அந்நபர் வசமாக சிக்கினார். தொடர்ந்து அவரை பொதுமக்கள் சுற்றிவளைத்து தலைமைச் செயலக காலனி காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.


மேலும் முன்னதாக இந்நபரை காவல் துறையினர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் திருட முயன்ற நபர் ராயப்பேட்டையைச் சேர்ந்த அர்ஜூன் (21) என்பதும், அவர் மீது அண்ணாசாலை, ராயப்பேட்டை உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் ஏற்கெனவே நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.


இந்நிலையில், காவல் துறையினர் அந்நபரைக் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மற்றொரு சம்பவம்


இதேபோல் முன்னதாக ஸ்ரீபெரும்புதூரில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்வதாகக் கூறி ஆஃபிஸ் சென்று வருவாதாக நடித்து அக்கம்பக்கத்து வீடுகளில் திருடிய நபர் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது


வாரத்தில் ஆறு நாள்கள் விழுப்புரத்தில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்வதாக சீருடை அணிந்து கொண்டு செல்வதும், ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டும் இரவு நேரத்தில் பூந்தமல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் அந்நபர் ஈடுபட்டு வந்துள்ளார்.


இந்நிலையில், நள்ளிரவில் சந்தேகத்திற்கிடமாக சுற்றி வந்த நபரைப் பிடித்து காவல் துறையினர் விசாரித்தபோது அவர் விழுப்புரம் அடுத்த செஞ்சியைச் சேர்ந்த சிவச்சந்திரன்(32) என்பதும், மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வரும் அந்நபர் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.


தொடர்ந்து அவரைக் கைது செய்து காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.




மேலும் படிக்க: The Royal Family Reunion: குடும்ப சர்ச்சைகளுக்கு நடுவே சர்ப்ரைஸ்...எலிசபெத்துக்கு ஒன்றாக அஞ்சலி செலுத்த வந்த வில்லியம்-கேட், ஹாரி-மேகன் தம்பதி!


Pitbull: தொடரும் ’பிட்புல்’ இன நாய்களின் கொடூர தாக்குதல்... ஆபத்தான நாய் இனங்களுக்கு தடை விதிக்க பீட்டா அழுத்தம்...