மதுரையில் காரை பார்க்கிங்கில் நிறுத்த உதவுவதாக கூறி காரை கடத்தி சென்றவரை சில நிமிடங்களில் விரட்டிபிடித்து கைது செய்த காவல்துறையினர்.

 



உதவுவதாக கூறி காரை கடத்தி சென்ற நபரை சில நிமிடங்களில் விரட்டிபிடித்து கைது செய்த அண்ணாநகர் காவல்துறையினரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் பாராட்டுகளை தெரிவித்தார்.


 


தென்காசி மாவட்டம் புளியங்குடியை சேர்ந்த மயில்வாகனன் (33) என்பவர் மதுரை குருவிக்காரன் சாலை பகுதியில் உள்ள MP லாட்ஜ் என்று தங்குவிடுதியில் சில நாட்களுக்கு முன்பு வந்து உரிமையாளரை சந்தித்து பொருளாதார ரீதியாக மிகுந்த சிரமத்தில் இருப்பதால் லாட்ஜில் சிறு சிறு பணிகளை செய்யக்கூடிய உதவியாளர் பணி கேட்டுள்ளார்.  இதனை நம்பி உரிமையாளரும் பணி வழங்கியுள்ளார். அப்போது பணியில் சேருவதற்கான அடையாள அட்டைகள் கேட்டபோது தொலைந்துவிட்டது விரைவில் தருகிறேன் என கூறியுள்ளார்.

 




 

இதனை தொடர்ந்து தற்காலிகமாக உதவியாளராக  மயில்வாகனன் பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் சென்னை சோளிங்கநல்லூரை சேர்ந்த விகாஷ்விஷ்ணு (29) என்பவர் MP லாட்ஜில் தங்கியுள்ளார். இதனையடுத்து தனது சொகுசு காரில் சென்று திருமண நிகழ்வுக்காக உறவினர்களுக்கு பத்திரிக்கை வழங்கிவிட்டு மீண்டும் லாட்ஜிற்கு வந்துள்ளார். அப்போது லாட்ஜின் வெளியே காரை நிறுத்த முடியாமல் நின்றுகொண்டிருந்தபோது அங்கு வந்த உதவியாளர் மயில்வாகனன் கார் சாவியை கொடுங்கள் நான் காரை நிறுத்திவிட்டு வருகிறேன் என கூறியுள்ளார்.  இதனைடுத்து மயில்வாகனனிடம் சாவியை கொடுத்துவிட்டு அறைக்கு சென்ற விஷ்ணு நீண்டநேரம் ஆகியும் மயில்வாகனன கார் சாவியை கொண்டுவரவில்லை என ரிசப்சனில் கீழே கேட்டபோது வெளியில் வந்து பார்த்தால் மயில்வாகனன் காரை எடுத்து சென்றது தெரியவந்துள்ளது. 




 

இதனால் அதிர்ச்சியடைந்த லாட்ஜ் நிர்வாகிகள் மற்றும் கார் உரிமையாளர் அண்ணாநகர் காவல்நிலையத்திற்கு புகார் அளித்த நிலையில் விரைந்துவந்த காவல்துறையினர் அந்த பகுதியில் கார் கடந்து சென்ற பகுதிகளில் விசாரணை நடத்தி காரில் துரத்தி சென்று காரை மடக்கிபிடித்தனர். பின்னர் காரை கடத்திசென்ற மயில்வாகனனை காவல்துறையினர் கைது செய்தனர். மதுரையில் லாட்ஜில் தங்கியவரிடம் காரை நிறுத்த உதவுவதாக கூறி காரை கடத்தி சென்ற நபரை சில நிமிடங்களில் விரட்டிபிடித்து கைது செய்த அண்ணாநகர் காவல்துறையினரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் பாராட்டுகளை தெரிவித்தார்.