மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரயில்வே சாலையில் வசித்து வருபவர் 51 வயதான தன்ராஜ் சவுத்ரி. ராஜஸ்தானை பூர்விகமாக கொண்ட இவர் கடந்த 15 ஆண்டுகளாக சீர்காழியில் சொந்த வீடு கட்டி வசித்து வருகிறார். மேலும் இவர் பூம்புகார் அருகே தருமகுளம் பகுதியில் நகை அடகுக் கடை மற்றும் தங்க நகைகள் மொத்த விற்பனை செய்து வருகிறார்.




இந்நிலையில் கடந்த 2021 -ஆம் ஆண்டு ஜனவரி 27 -ஆம் தேதி அதிகாலை இவரது வீட்டிற்குள் புகுந்த மூன்று வட மாநிலத்தவர்கள் தன்ராஜ் சவுத்ரியின் மனைவி ஆஷா மற்றும் அவரது மகன் அகில் ஆகிய இருவரையும் கத்தியால் கொடூரமாக குத்தி கொலை செய்துவிட்டு, தன்ராஜ் மற்றும் அவரது மருமகள் நேஹல் ஆகிய இருவரையும் கட்டி போட்டுவிட்டு வீட்டில் இருந்த 12.5 கிலோ தங்க நகை மற்றும் 6.75 லட்சம் ரூபாய் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துக் கொண்டு தன்ராஜ் சவுத்ரி வீட்டில் நிறுத்தி வைத்திருந்த காரினை திருடி தப்பிச் சென்றனர்.




இதனிடையே கார் பழுதானதால் தப்பி சென்ற கொள்ளையர்கள்  சீர்காழி அடுத்த எருக்கூர் கிராமத்தில் உள்ள சவுக்கு தோப்பில் பதுங்கி இருந்தனர். இந்த தகவலை பொதுமக்கள் மூலம் அறிந்த காவல்துறையினர் ராஜஸ்தானை சேர்ந்த கொள்ளை, கொலையில் ஈடுபட்ட மனீஷ், மயிலாடுதுறை ரமேஷ் பட்டேல், மஹிபால் சிங் ஆகிய மூவரையும் மயிலாடுதுறை மாவட்ட அப்போதைய காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா தலைமையில் கொண்ட காவல்துறையினர் பிடிக்க சென்றனர். அப்பொழுது அதிரடிப்படை வீரர் சாலிம் என்பவரை கொள்ளையர்கள் தாக்கினார். அதனை அடுத்து ராஜஸ்தான் மாநிலம் அஹோலி கிராமத்தைச் சேர்ந்த மகிபால் சிங் என்பவரை காவல்துறையினர் என்கவுண்டர் செய்தனர்.




தொடர்ந்து அங்கு மறைந்திருந்த ராஜஸ்தான் ஜோத்பூரை சேர்ந்த மணிஷ், ராஜஸ்தான் மாநிலம் கங்காவாஸ் பகுதியில் சேர்ந்த ரமேஷ் பட்டேல் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இதுகுறித்து கொலை கொள்ளை குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு மணிஷ், ரமேஷ் பட்டேல் மற்றும் இதில் தொடர்புடைய கும்பகோணம் கருணாராம் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.





இந்த வழக்கு விசாரணையானது மயிலாடுதுறை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் மணீஷ் தலைமறைவாக இருந்துள்ளார். அவரை பிடிக்க  நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை அடுத்து சீர்காழி காவல் ஆய்வாளர் மணிமாறன் மற்றும் காவல்துறை, பல்வேறு இடங்களில் தேடிவந்ததாகவும், சென்னையில் மணிஷ் தலைமறைவாக இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சில தினங்கள் தங்கியிருந்து மணிஷ் குறித்த தகவல்களை திரட்டி, பின்னர் மணிஷை கைது செய்து  இன்று காலை அங்கிருந்து சீர்காழி காவல் நிலையம் கொண்டு வந்துள்ளதாக காவல்துறையினர் தகவல் தெரித்துள்ளனர். தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Watch video: சேற்றில் சிக்கிய யானைக்குட்டிகள் ! இரண்டு நாட்களுக்கு பிறகு மீட்பு ! ஹாப்பி எண்டிங் வீடியோ!