Crime : கடன் பிரச்சனையால் குழந்தைகளை கொலை செய்து தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் மகபூப்நகர் மாவட்டம் கோஸ்கியை சேர்ந்த வெங்கடேஸ்வர் என்பவரை மானசா (27) என்பவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு பாலாதித்யா (8), பவ்ய ஸ்ரீ (7) என்ற இரு குழந்தைகள் உள்ளனர். வெங்கடேஸ்வரின் உடல்நிலை சரியில்லாததால், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். இதன் பின்பு, நிஜாமாபாத் என்ற இடத்திற்கு மானசா சென்றார். அங்கு தனது சகோதரர் சந்தீப்புடன், மானசா தனது குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
இதனை அடுத்து தனக்கு கடன் சுமை அதிக உள்ளதால் வேலைக்கு செல்ல மானசா முடிவு செய்தார். இதனால் அதே பகுதியில் உள்ள ஒரு மாலில் வேலையில் சேர்ந்து சென்று கொண்டிருந்தார். இந்நிலையில், ஜனவரி 23ஆம் தேதி அன்று, மானசா தனது சகோதரர் சந்தீப்பிடம் வேலைக்குச் செல்வதாகக் கூறினார். பின்பு, பள்ளியில் இருந்த தனது குழந்தைகளை அழைத்து வந்தார். அவர்கள் மூவரும் பேருந்தில் நிர்மல் மாவட்டம் பாசார் நகரில் உள்ள கோயிலுக்கு சென்றனர்.
அந்த பகுதியில் இருக்கும் ஆற்றின் அருகே அமர்ந்துக் கொண்டிருந்தார். மானசா குழந்தைகளுக்கு உணவு கொடுத்துவிட்டு, ஆற்றில் இரண்டு குழந்தைகளை வீசியுள்ளார். பின்னர், அவரும் ஆற்றில் குதித்துள்ளார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மூன்று பேரின் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கடன் பிரச்சனையால் குழந்தைகளை ஆற்றில் வீசி கொலை செய்து, மானசாவும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,சென்னை - 600 028.தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)
மேலும் படிக்க