காதலனுடன் சேர்த்து வைப்பதாக கூறி 40 சவரன் நகை கொள்ளை மற்றும் 5 லட்சம் பணம் கேட்டு மிரட்டியதாக 2 பஞ்சாப் வாலிபர்களை சென்னை விமான நிலையத்தில் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.


சென்னையடுத்த பரங்கிமலை சேர்ந்த 19 வயது இளம்பெண் தனது 11ஆம் வகுப்பில் சீனியர் ஒருவரை காதலித்து வந்தார். பின் அவர் வெளிநாட்டுக்கு சென்ற போது அவருடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது அவரை மீண்டும் கண்டுபிடிக்க அந்த இளம்பெண் செயலி ஒன்றில் பதிவு செய்திருந்தார்.


அந்த செயலியிலிருந்து இருவர், தனது காதலனை கண்டுப்பிடித்து தருவதாகவும், அதற்கு அதிகம் செலவாகும் என கூறியுள்ளனர். அதற்கு ஒப்புக்கொண்ட அந்த பெண், முதலில் 40 சவரன் நகையை சென்னை விமான நிலையத்தில் வழங்கியுள்ளார். மேலும் பல லட்சம் பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளனர்.


இதனால் அந்த பெண் சென்னை மீனம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் காதலனுடன் சேர்த்து வைப்பதாக கூறி தன்னிடம் 40 சவரன் நகையை ஏமாற்றி வாங்கிச் சென்றதாகவும். அந்த நகையை சென்னை விமான நிலையத்தில் அவர் கொடுத்ததாகவும் கூறியிருந்தார். மேலும் 5 லட்சம் பணம் கேட்டு மிரட்டுவதாக கூறி புகார் அளித்திருந்தார்.


அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாண்டி தலைமையிலான போலீசார் இளம்பெண்ணை, பஞ்சாப் வாலிபர்களிடம் தொடர்பு கொள்ள செய்தனர். அதன்படி பேசிய இளம்பெண், சென்னை விமான நிலையத்துக்கு வந்தால் நீங்கள் கேட்ட பணத்தை தருகிறேன் என்றார்.

அதன்படி பஞ்சாப் வாலிபர்கள் இருவரும் விமானம் மூலம் சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்துக்கு வந்தனர். அப்போது இளம்பெண்ணுடன் மாறுவேடத்தில் நின்றிருந்த போலீசார், 2 பேரையும் மடக்கிப்பிடித்தனர். பின்னர் இருவரையும் மீனம்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.


அதில் அவர்கள், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பகுதியை சேர்ந்த அனில்குமார் (வயது 27), தரன் பகுதியை சேர்ந்த ககன்தீப் பார்கவ் (33) என்பதும், இவர்கள் இருவரும் போலியான இணையதளத்தை தொடங்கி பல இளம்பெண்களையும், இளைஞர்களையும் ஏமாற்றி பல லட்சம் மோசடி செய்ததும் தெரிய வந்தது. 2 பேரையும் கைது செய்த போலீசார், இவர்களிடம் இருந்து ரூ.8.5 லட்சம் மற்றும் 54 கிராம் தங்க சங்கிலிகளை பறிமுதல் செய்தனர். பின்னர் கைதான இருவரையும்  சிறையில் அடைத்தனர்