"அவசரமாக தகவல் தெரிவித்தனர்"

 

பஹ்ரைனிலிருந்து சென்னை வந்த  விமானம், நடுவானில் பறந்து கொண்டு இருந்தபோது, தஞ்சாவூரைச் சேர்ந்த பயணி, திடீர் நெஞ்சு வலியால் உயிர் இழப்பு. உடலை கைப்பற்றி சென்னை விமான நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியை சேர்ந்தவர் ராஜா முகமது (66). இவர்  புனித பயணமாக மெக்காவிற்கு சென்றுவிட்டு, குழுவினருடன் சேர்ந்து, இன்று அதிகாலை ஃகல்ப் ஏர்வேஸ் பயணிகள் விமானத்தில், பஹ்ரைனில் இருந்து சென்னை திரும்பி கொண்டு இருந்தார்.  இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, ராஜா முகமதுவுக்கு  திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு, விமானத்திற்குள் வலியால் துடித்தார். இதை அடுத்து சக குழுவினர், விமான பணிப்பெண்களுக்கு அவசரமாக தகவல் தெரிவித்தனர். உடனடியாக விமான பணிப்பெண்கள், ராஜா முகமது முதலுதவி சிகிச்சை அளித்ததோடு, விமானிக்கும்  தகவல் தெரிவித்தனர். 

 

நெஞ்சு வலியால்

 

சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அவசரமாக தகவல் கொடுத்த விமானி, பயணி ஒருவர் நெஞ்சு வலியால் துடித்துக் கொண்டு இருக்கிறார். அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும். எனவே மருத்துவ குழுவை விமான நிலையத்தில் தயாராக இருக்கும்படி கூறினார். அதோடு இந்த விமானத்திற்கு தரையிறங்குவதற்கு முன்னுரிமை அளிக்கும்படியும் கேட்டுக்கொண்டார். அதன்படி ஃகல்ப்  ஏர்வேஸ் விமானம் இன்று அதிகாலை 3:15 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரை  இறங்கியது. விமான நிலையத்தில் தயார் நிலையில் இருந்த மருத்துவ குழுவினர், விமானத்திற்குள் ஏறி, பயணி ராஜாமுகமதுவை பரிசோதனை செய்தனர். அவர் மயங்கிய நிலையில், இருக்கையில் உயிர் இழந்திருந்தார். இதை அடுத்து  மருத்துவர்கள் கடுமையான  மாரடைப்பு காரணமாக, ராஜா முகமது உயிரிழந்தார் என்று அறிவித்தனர்.

 

" கிருமி நாசினிகள் தெளித்து"

 

உடனடியாக சென்னை விமான நிலையபோலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி குரோம்பேட்டை  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையும் நடத்துகின்றனர். இதற்கு இடையே, இந்த ஃகல்ப் ஏர்வேஸ் பயணிகள் விமானம், மீண்டும்  இன்று அதிகாலை 4:10 மணிக்கு, சென்னையில் இருந்து பக்ரைன்  புறப்பட்டுச் செல்ல வேண்டும்.இந்த இந்த விமானத்தில் பக்ரைன் செல்ல 192 பயணிகள் தயார் நிலையில் இருந்தனர். ஆனால் விமானி, பயணி ஒருவர் விமானத்திற்குள் உயிரிழந்து விட்டதால், விமானத்தை முழுமையாக சுத்தப்படுத்திய பின்புதான், மீண்டும் இயக்க முடியும் என்று அறிவித்து விட்டார். இதை அடுத்து  விமான நிறுவன  ஊழியர்கள், அந்த விமானத்தை கிருமி நாசினிகள் தெளித்து முழுமையாக சுத்தப்படுத்தினர். அதன் பின்பு ஃகல்ப் ஏர்வேஸ் விமானம் இரண்டரை மணிநேரம் தாமதமாக, இன்று காலை 6:40 மணிக்கு 192 பயன்களுடன், சென்னையில் இருந்து பஹ்ரைனுக்கு புறப்பட்டுச் சென்றது.