வெளிநாட்டில் இருந்து வீடியோக்களை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்த வழக்கில், குவைத்தில் இருந்து நாடு திரும்பிய கௌதம்-ஐ, திருவனந்தபுரம் விமான நிலையத்தில் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். 

 

குற்ற பின்னணி:

 

கடந்த 2020 ம் ஆண்டு சென்னையை சேர்ந்த இளம் பெண் மருத்துவர் ஒருவர, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த தங்கபாண்டியன் என்பவரது மகன் காசி மீது பாலியல் வன்கொடுமை மற்றும் பண மோசடி புகார் அளித்தார்.

 

புகார்-கைது

 

அதன் அடிப்படையில் காசி, கன்னியாகுமரி மாவட்ட போலீசாரால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. பொருளாதார ரீதியில் வசதியுடன் காணப்படும் இளம் பெண்களுடன் நட்பாக பழகி அவர்களை தனது காதல் வலையில் சிக்க வைக்கும் காசி, சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அப்பெண்களே தன்னை காதலிக்கும் அளவிற்கு அவர்களை ஏமாற்றி நம்பிக்கையின் அடிப்படையில் அவருடன் நெருங்கி பழகும் பெண்களை வீடியோ பதிவு செய்வதோடு அவர்களை மிரட்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டதும், இதில் தமிழகம் மற்றும் பெங்களூர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட இளம் பெண்களையும் பள்ளி கல்லூரி மாணவிகளையும், இதுபோன்று மோசடி செய்துள்ளது தெரியவந்தது.



 

குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது:

 

இதனை தொடர்ந்து அவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இவ்வழக்கு சிபிசிஐடி போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது , காசியின் கூட்டாளிகளான டேசன் ஜினோ, தினேஷ் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.இந்நிலையில் வழக்கு தொடர்பான சாட்சியங்களை கலைப்பதாகவும் ஆதாரங்களை அழித்த காரணத்தாலும் காசியின் தந்தை தங்கபாண்டியன் கைது செய்யப்பட்டு ஒரு ஆண்டிற்கு பின் தற்போது ஜாமினில் வெளிவந்துள்ளார். 

 

இந்நிலையில் காசியின் மற்றொரு நண்பன் கௌதம் என்பவர் வெளிநாட்டில் இருந்து கொண்டு காசியின் அறிவுறுத்தலின் படி பெண்களின் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சிபிசிஐடி போலீசார் அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர்.

 

நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு

 

தற்போது குவைத் நாட்டில் இருந்து திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வந்திருப்பதாக சிபிசிஐடி போலீசாருக்கு தகவல் கிடைத்ததின் பேரில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையம் சென்ற போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

 




இந்நிலையில்,நேற்று இரவு நாகர்கோவில் கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதி சந்திரகலா முன்னிலையில் ஆஜர்படுத்தினர். இதனை தொடர்ந்து கௌதம்-ஐ வரும் 28 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.