மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மங்கைமடம் கிராமத்தில் சர்க்கரை ஆலை ஊழியர் வீட்டின் கதவை உடைத்து 125 சவரன் தங்க நகை மற்றும் 80 ஆயிரம் பணம் அரை கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடரும் குற்ற சம்பவங்கள்
தமிழகத்தில் நாள்தோறும் திருட்டு, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருவது தொடர் கதையாக இருந்து வருகிறது. இதனை தடுக்க காவல்துறையினர் தரப்பில் இருந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், காவல்துறையினர் கண்களில் மண்ணைத் தூவும் விதமாக திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது. இதனால் நாள்தோறும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு குற்ற சம்பவங்களை குறைக்க காவல்துறையினர் முயன்று வருகின்றனர்.
அடுத்து அடுத்து திருட்டு
அதுவும் குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டத்திலும் நாளுக்கு நாள் திருட்டு நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் கோயில் உண்டியலை உடைத்து 2 லட்சம் ரூபாய் திருட முயன்று மூன்று கொள்ளையர்கள் சிக்கிய நிலையில் அதனை தொடர்ந்து இரண்டு தினங்களில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து 7 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது. அந்த பரபரப்பு அடங்கும் முன்பு மீண்டும் ஒரு வீட்டின் கதவை உடைத்து 125 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவமனைக்கு சென்ற குடும்பம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மங்கைமடம் கிராமத்தில் பாலாஜி நகரில் வசித்து வருபவர் செல்வேந்திரன். இவர் சர்க்கரை ஆலையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவரது மகளின் பிரசவத்திற்காக கடந்த திங்கட்கிழமை வீட்டை பூட்டிவிட்டு மயிலாடுதுறை உள்ள மருத்துவமனைக்கு குடும்பத்துடன் சென்றுள்ளனர். பின்னர் மூன்று நாட்களுக்கு பின் நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்துள்ளது.
125 சவரன் தங்க நகைகள் மாயம்
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த செல்வேந்திரன் வீட்டின் உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது வீட்டின் அறைகளில் இருந்த பீரோ மற்றும் சூட்கேஸ் உடைத்து அதில் இருந்த 125 சவரன் தங்க நகைகள், அரை கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 80 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. உடனடியாக இதுகுறித்து செல்வேந்திரன் திருவெண்காடு காவல் நிலையத்தில் அளித்த புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் திருவெண்காடு போலீசார் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஏடிஎம் கொள்கை
கடந்த வாரம் சீர்காழி அருகே மேலச்சாலை இந்தியன் வங்கி ஏடிஎம் இயந்திரம் உடைத்து ஆறு லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில் இதுவரை கொள்ளையர்கள் பற்றிய எந்த ஒரு துப்பும் கிடைக்காத நிலையில் தற்போது மங்கை மடத்தில் 125 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.