மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மாமனார் மருமகன் இடையே ஏற்பட்ட மோதலில், அம்மிக்கல்லில் விழுந்து மாமனார் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பன்னீர்செல்வம் தெருவை சேர்ந்தவர் 60 வயதான ரவிக்குமார். மாற்றுதிறனாளியான இவர் வீட்டிலேயே சைக்கிள் பழுது நீக்கும் பணி செய்து வருகிறார். இவரது மகள் 28 வயதான ஆஷா. இவரது கணவர் ராமநாதபுரம் மாவட்டம் நாச்சி கிராமத்தைச் சேர்ந்த 30 வயதான கார்த்திக்.
மாமனார் மருமகன் இடையே மோதல்
கார்த்திக் கொத்தனார் வேலை செய்து வரும் நிலையில், கடந்த சில மாதங்கள் மாமனார் ரவிக்குமார் வீட்டிலேயே தங்கி வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களாக கார்த்திக் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மாமனார் ரவிக்குமார் கார்த்தியிடம் ஏன் வேலைக்கு செல்லவில்லை என கேட்டுள்ளார்.
TN Rain: தமிழ்நாட்டை துரத்தும் கனமழை: 9 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை: வானிலை புது அப்டேட்.!
அம்மிக்கல்லில் விழுந்து உயிரிழப்பு
இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது அதனை தொடர்ந்து தகராறு முற்றியதில் கார்த்திக் தனது மாமனார் ரவிக்குமாரை தள்ளிவிட்டுள்ளார், அப்போது அருகில் இருந்த அம்மிக்கல்லில் ரவிக்குமார் விழுந்துள்ளார், அதில் தலையில் பலத்த காயம் அடைந்து ரவிக்குமார் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் மிதந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
AQI Index : சுத்தமான காற்றுக்கு நெல்லை தான் டாப்! மோசமான காற்றுள்ள நகரங்கள் இவை தான்... முழு லிஸ்ட்
எஸ்.பி. நேரில் விசாரணை
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சீர்காழி காவல்துறையினர் ரவிக்குமாரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் குறித்து மயிலாடுதுறை மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்டாலின் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார். மேலும் சீர்காழி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், தப்பி ஓடிய கார்த்திக்கை காவல்துறையினர் சுத்தி வளைத்து கைது செய்தனர். இந்த சூழலில் மாமனாரை மருமகன் கொலை செய்த இச்சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.