மதுரையில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக இரண்டு பெண் குழந்தைகளை  கொலை செய்து விட்டு தற்கொலைக்கு முயன்ற தந்தையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக மனைவியிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

கணவன் - மனைவி இடையே கடந்த சில மாதங்களாக  தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

 

மதுரை மாநகர் யாகப்பா நகர் பாலாஜிநகர் 3- ஆவது தெரு பகுதியைச் சேர்ந்தவர் சேதுபதி (35). இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ராஜேஸ்வரி. இந்த தம்பதியினருக்கு ரக்ஷிதா, ரக்‌ஷனா இரண்டு பெண் குழந்தைகளுடன் வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் கணவன் சேதுபதி மனைவி ராஜேஸ்வரி இடையே கடந்த சில மாதங்களாக  தகராறு ஏற்பட்டுவந்துள்ளது. இதன் காரணமாக மனைவி சில நாட்களாக கணவரிடம் சண்டை போட்டுவிட்டு வெளியில் உறவினர்கள் வீட்டிற்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் கணவர் சேதுபதி கம்ப்யூட்டர் கிளாஸில் சேர்த்துவிட்ட நிலையில் ராஜேஸ்வரி கணிணி வகுப்பு படித்துவந்துள்ளார்.

 


 

கழுத்தை நெரித்தும் கொலை செய்துள்ளார்

 

இந்தநிலையில்  இரு குழந்தைகளும்  இன்று காலை வீட்டில்  தூங்கிக் கொண்டிருந்தபோது இரண்டு குழந்தைகளான 7 வயது குழந்தை ரக்ஷனா மற்றும் 5 வயது குழந்தை ரக்சிதாவை கத்தியால் குத்தியும் கம்பியால் கழுத்தை நெரித்தும் கொலைசெய்துள்ளார்.  பின்னர் தந்தை சேதுபதியும் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார். இதனிடையே கம்ப்யூட்டர் கிளாஸ்க்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த ராஜேஸ்வரி கதவை திறந்துபார்த்தபோது குழந்தைகள் கொலை செய்யப்பட்ட நிலையில், கணவர் தூக்கில் தொங்கியதை பார்த்து காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார்.

 

அண்ணாநகர் காவல்துறையினர் விசாரணை

 

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அண்ணாநகர் காவல்துறையினர் இரு குழந்தைகளின் உடலை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.  பின்னர் தற்கொலைக்கு முயன்ற சேதுபதி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மதுரையில் இரண்டு பெண் குழந்தைகளுக்கு கொலை செய்துவிட்டு தந்தையும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சேதுபதியின் மனைவி ராஜேஸ்வரியிடம்  அண்ணாநகர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

தற்கொலை எண்ணம் வேண்டாம்

 

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும்.மாநில உதவி மையம் :104சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,எண்; 11, பார்க் வியூவ் சாலை,ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)