SP Balasubramaniam Road: எஸ்.பி.பியின் நினைவைப் போற்றும் வகையில், அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள தெருவுக்கு அவரது பெயர் சூட்டப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நுங்கம்பாக்கம் , காம்தார் நகர் முதல் தெருவுக்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை என பெயர் சூட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


நினைவில் நிற்கும் எஸ்.பி.பி


கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளவர் மறைந்த பாடகர் எஸ்.பி.பி. கிட்டத்தட்ட 16 மொழிகளில் மொத்தம் 40,000 பாடல்களை பாடி ஆறு தேசிய விருதுகளை வென்று இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் விருதுகளை பெற்ற்வர். தனது குழந்தை தனமான குணத்தாலும், நகைச்சுவை உணர்வாலும் அனைவரது மனதிலும் ஏதோ ஒரு நினைவாக நிலைத்து நிற்பவர் எஸ்.பி.பி. 


 பாடல்களின் வழியாகவோ, நகைச்சுவை வழியாகவோ, அல்லது மனதிற்கு நம்பிக்கை அளிக்கு அவரது சொற்களின் வழியாகவோ ஏதோ ஒரு வகையில்  நம்மை மகிழ்ச்சியாக்கி விடக்கூடியவர். 


கடந்த 2020 ஆம் ஆண்டு இந்திய சினிமாவிற்கு பெரும் இழப்பாக அவரது மறைவு இருந்தது. அவர் பாடல்கள் வழி மக்கள் அவரை நினைவு கூறாத நாள் இல்லை என்றே சொல்லலாம்.




கோரிக்கை:


பாடகர் எஸ்.பி.பி நினைவை போற்றும் வகையில், அவர் வாழ்ந்த காம்தார் நகர் பகுதியை எஸ்.பி.பி நகர் என பெயர் மாற்றம் செய்ய அவரது மகன் சரண் முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்தார். 


இந்நிலையில், எஸ்.பி.பியின் நினைவைப் போற்றும் வகையில், அவரது நினைவு நாளான இன்று, அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள பகுதியில் உள்ள சாலைக்கு, அவரது பெயர் சூட்டப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தற்போது நுங்கம்பாக்கம், காம்தார் நகர் சாலைக்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை என பெயர் சூட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருப்பதாவது “ பாடும் நிலா எஸ்.பி பாலசுப்பிரமணியம் அவர்களது நினைவு நாளில், அவர் வாழ்ந்த காம்தார் நகர் பிரதான சாலைக்கு “எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை” எனப் பெயரிடப்படும் எனும் அறிவிப்பைச் செய்வதில் பாலு அவர்களின் கோடிக்கணக்கான ரசிகர்களில் ஒருவனாக மகிழ்ச்சியும் பெருமிதமும் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.