திருப்போரூர்: செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே கணவன் உயிரிழந்த சோகத்தில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது 

 

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த செம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட அச்சரவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ராம் வயது 75. இவர் கடந்த 2001 முதல் 26 ஆம் ஆண்டு வரை செம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவராகவும் இருந்து வந்துள்ளார். ராமுவின் மனைவி தங்கமணி வயது ( 65).  இவர்கள் இருவரும் அப்பகுதியில் இணைபிரியாத தம்பதிகளாக  இருந்து வந்துள்ளனர்

 

இந்த நிலையில் ராமு கடந்த சில நாட்களாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி ராமு உயிரிழந்தார். இதனை அடுத்து உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கிராம மக்கள் பலரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு சென்றனர். இந்த நிலையில் தன்னை விட்டு கணவர் பிரிந்து சென்ற துக்கத்தை தாங்க முடியாமல், ராமுவின் மனைவி தங்கமணி தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், திடீரென அழுது கொண்டிருந்த பொழுது நெஞ்சை பிடித்தபடி கீழே விழுந்துள்ளார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் தங்கமணியை கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

 

இந்த நிலையில் நேற்று காலை தங்கமணியும் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்து உள்ளார். இதனைத் தொடர்ந்து அவரது உடலும் செம்பாக்கம் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு இறுதிச் சடங்குகளை உறவினர்கள் செய்துள்ளனர். கணவன் இருந்த சோகத்தில் மனைவியும் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் அனைவரும் திரண்டு வந்து அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர் இருவரது உடல்களும் அடக்கம் செய்வதற்காக ஒரே வாகனத்தில், எடுத்துச் செல்லப்பட்டு மயானத்தில், அருகருகே வைத்து அடக்கம் செய்யப்பட்டது. இச்சம்பவம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.