கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் காணாமல் போன ரூ.25 லட்சம் மதிப்பிலான 211 செல்போன்களை சைபர் கிரைம் போலீசார் மீட்ட நிலையில், அவற்றை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் உரியவர்களிடம் ஒப்படைத்தார்.

செல்போனுடன் தவறிய பணம் ஏடிஎம் கார்டுகளையும் முறையாக மீட்ட சைபர் கிரைம் போலீசாருக்கு பொதுமக்கள் மத்தியில் கைகொடுத்து பாரட்டுக்களையும் தெரிவித்து கொண்டார்.

 

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் செல்போன் திருடு போனதாகவும் காணாமல் போனதாகவும் ஏராளமான புகார்கள் குவிந்தது. இதனையடுத்து திருட்டு மற்றும் காணாமல் போன செல்போன்களை உடனடியாக கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் தனது நேரடி கண்காணிப்பில் உள்ள சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

 



 

 

உத்தரவின் பேரில் சைபர் கிரைம் போலீசார் செல்போன்களை அதன் ஐஎம்இ எண் உதவியுடன் எந்த பகுதியில் இயங்கி கொண்டிருக்கிறது என்பதை கண்காணித்து திருடியவர்களை கைது செய்ததோடு செல்போன்களையும் மீட்டனர். அந்த வகையில் ரூ.25 லட்சம் மதிப்பிலான 211 செல்போன்களை சைபர் கிரைம் போலீசார் மீட்ட நிலையில் அதை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி தக்கலை காவல் நிலையத்தில் வைத்து நடைபெற்றது.

 

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரண் பிரசாத் காணாமல் போன செல்போன்களை மேற்கு வங்கம் வரை சென்று போலீசார் மீட்டுள்ளனர் என கூறி,செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்ததோடு அவர்களுக்கு காவல் உதவி ஆப்-ன் பயன்பாடுகள் குறித்து எடுத்துரைத்ததோடு அதை பயன்படுத்தவும் கேட்டுக்கொண்டார்.

 

தொடர்ந்து செல்போன்களை உரியவர்களிடம் வழங்கும் போது செல்போன் உறையில் அவர்கள் பாதுகாப்பாக வைத்திருந்த பணம் மற்றும் ஏடிஎம் கார்டுகளையும் சைபர் கிரைம் போலீசார் முறையாக மீட்டு கொடுப்பதை கண்ட அவர், சைபர் கிரைம் சப்-இன்ஸ்பெக்டர் ஷம்சுதிர் என்பவருக்கு பொதுமக்கள் மத்தியிலேயே கைகொடுத்து பாராட்டினார்.

 



 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் கூறுகையில், அண்மை காலமாக செல்போன் திருட்டு என்பது அதிகரித்து வருகிறது. அப்படி செல்போன் திருடு போனதாக வரும் புகார்களை விசாரிக்க தனி பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. நாகர்கோவில், கன்னியாகுமரி, தக்கலை, குளச்சல் என நாலு சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் செல்போன் திருடு அல்லது தொலைந்து போனால் அதனை மீட்க உடனடி நடவடிக்கை எடுத்து வரப்படுகிறது. தற்போது உள்ள தொழில்நுட்ப உதவியுடன் செல்போன்களை கண்டுபிடிக்க முடிகிறது. காவல் உதவி செயலியை அனைவரும் தங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். அதன் மூலம் ஆபத்து ஏற்படும் போது உடனடியாக உதவி கிடைக்கும் என தெரிவித்தார் தொடர்ந்து பேசிய அவர், பொதுமக்கள் வாகனங்கள் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.