தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள அழகர்சாமிபுரம் ஜக்கம்மாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியராஜன் (42). பெயிண்டர். அவருடைய மனைவி கலையரசி. இந்த தம்பதிக்கு, 6 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்னை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால் கலையரசி கோபித்து கொண்டு, தனது மகளுடன் ஆண்டிப்பட்டி அருகே சக்கம்பட்டியில் உள்ள தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.




ஆரோக்கிய ராஜன், அவரது தாய் வேதமணி வீட்டில் வசித்து வந்தார். ஆரோக்கியராஜனின் அண்ணன் மனோகரன். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவர், இறந்து விட்டார். இதனால் மனோகரனின் மகன் நிதீஷ்குமார் (21) என்பவரும் தனது பாட்டி வேதமணி வீட்டில் வசித்து வந்தார். நிதீஷ்குமாரின் தாய் தனியாக குடியிருந்து வருகிறார். இந்நிலையில் நிதீஷ்குமார் வேலைக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரை, ஆரோக்கியராஜன் கண்டித்துள்ளார்.


”தொழிலாளர்களின் நலன் கருதியே 12 மணிநேர வேலை நீட்டிப்பு சட்ட திருத்தம்” - தமிழிசை சௌந்தராஜன்


வேலைக்கு செல்லாவிட்டால் வீட்டை விட்டு வெளியே சென்று விடுமாறு கூறியதாக தெரிகிறது. இது, நிதீஷ்குமாருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து நேற்று முன்தினம் இரவு முழுவதும் தூங்காமல் வீட்டுக்கு வெளியே நிதீஷ்குமார் இருந்துள்ளார். இதற்கிடையே ஆரோக்கியராஜன், அவரது தாய் வேதமணி ஆகிய 2 பேரும் வீட்டில் உள்ள ஒரு அறையில் தூங்கி கொண்டிருந்தனர். தனது சித்தப்பா உயிரோடு இருந்தால், தான் சுதந்திரமாக சுற்றித்திரிய முடியாது என எண்ணிய நிதீஷ்குமார் அவரை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். இதனால் நேற்று அதிகாலை அவர் வீட்டிற்கு வெளியே கிடந்த ஒரு கல்லை எடுத்து வந்தார்.


”தொழிலாளர்களின் நலன் கருதியே 12 மணிநேர வேலை நீட்டிப்பு சட்ட திருத்தம்” - தமிழிசை சௌந்தராஜன்




பின்னர் அவர், அயர்ந்து தூங்கி கொண்டிருந்த ஆரோக்கியராஜன் தலையில் கல்லைப் போட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வௌ்ளத்தில் அலறினார். அந்த சத்தம் கேட்டதும் பக்கத்தில் படுத்திருந்த வேதமணி எழுந்து அய்யோ, அம்மா என்று கூச்சலிட்டார். அதற்குள் நிதீஷ்குமார், அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதற்கிடையே அங்கு வந்த அக்கம்பக்கத்தினர், ஆரோக்கியராஜனை மீட்டு சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.


ரயில்வே தண்டவாளத்தில் தூங்கிய வாலிபர்கள் - ரயில் மோதி 2 பேர் உயிரிழந்த சோகம்


அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இந்தநிலையில் தப்பி ஓடிய நிதீஷ்குமார் நேராக பெரியகுளம் காவல் நிலையத்துக்கு சென்று சரண் அடைந்தார். அங்கிருந்த போலீசாரிடம் நடந்த சம்பவம் குறித்து அவர் தெரிவித்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நிதீஷ்குமாரை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலைக்கு செல்லாததை கண்டித்ததால் பெயிண்டர் தலையில் கல்லைப்போட்டு உறவினர் கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.











ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண