தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் ஆலக்குடி ரயில்வே ஸ்டேஷன் அருகே பெண்ணிடம் இருந்து நகை மற்றும் செல்போனை பறித்துச் சென்ற கும்பலை சேர்ந்த 2 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான 2 பேரை தேடி வருகின்றனர்.



தஞ்சை மாவட்டம் ஆலக்குடி ரயில்வே ஸ்டேஷன் அருகே கடந்த ஜனவரி 1ம் தேதி ஸ்கூட்டியில் வந்த ரம்யா என்ற பெண்ணை வழிமறித்த 4 பேர் அடங்கிய கும்பல் அவரிடமிருந்து தங்க செயின் மற்றும் செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றது.

இதுகுறித்து வல்லம் போலீசில் ரம்யா புகார் செய்தார். இதையடுத்து இந்த வழிப்பறியில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க வல்லம் டிஎஸ்பி நித்யா உத்தரவுப்படி, வல்லம் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் ஆலோசனையின்படி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சாமிநாதன் தலைமையில் போலீசார் புவனேஸ், ராஜதுரை, ரஞ்சித்குமார் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதில் 4 பேர் கொண்ட கும்பல் இரண்டு பைக்குகளில் ரம்யாவை பின்தொடர்ந்து வந்து இந்த வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது. தொடர்ந்து அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா உதவியுடன் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் வழிபறியில் ஈடுபட்டவர்கள் தஞ்சாவூர் அண்ணா நகரை சேர்ந்த கந்தன் மகன் கபினேஷ் (21), தஞ்சாவூர் நாவலர் நகரை சேர்ந்த கணேசன் மகன் ரவிச்சந்திரன் (23) என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து கபினேஷ் மற்றும் ரவிச்சந்திரனை தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவான 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

வல்லம் டிஎஸ்பி நித்யாவின் உத்தரவின்படி தனிப்படை போலீசார் இந்த அதிரடி நடவடிக்கையை துரிதமாக மேற்கொண்டு விரைந்து செயல்பட்டு வழிப்பறியில் ஈடுபட்டவர்களை கைது செய்துள்ளமை மக்கள் மத்தியில் பாராட்டுக்களை குவித்து வருகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், ஆலக்குடி  வழியாக தஞ்சைக்கு செல்பவர்கள் மற்றும் தஞ்சையிலிருந்து கல்விராயன்பேட்டை, சித்திரக்குடி, பூதலூர், திருக்காட்டுப்பள்ளி செல்பவர்கள் என ஏராளமானோர் உள்ளனர். இப்பகுதியில்  இருபுறமும் வயல்வெளியாக இருப்பதால் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கிறது. ஹைவேஸ் பேட்ரோல் இருப்பது போல் அவ்வபோது இப்பகுதி உள்ளேயும் போலீசார் ரோந்து சென்று வந்தால் இதுபோன்ற வழிப்பறி சம்பவங்கள் நடக்காது. மேலும் இப்பகுதிகளில் உள்ள பஸ் நிறுத்த நிழற்குடைகளில் அமர்ந்து மது அருந்திவிட்டு பாட்டில்களை உடைத்துவிட்டு செல்கின்றனர்.

சுற்றுப்பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தஞ்சையில் பணியாற்றுவதால் இரவு நேரத்தில் தனியே வருவதை கண்காணித்து பணம் பறிப்பு சம்பவங்கள் நடக்கிறது. எனவே இதுகுறித்து உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.