சென்னை நீலாங்கரை சரஸ்வதி நகர், 2வது பிரதான சாலையில் வசித்து வந்தவர் 86 வயதான மூதாட்டி செண்பகம், அவருடன் 53 வயதான மகன் சுரேஷ் வசித்து வந்துள்ளார். இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. இந்நிலையில் சில நாட்களாக தாய் செண்பகத்தை காணவில்லை என்று அக்கம்பக்கத்தினர் சுரேஷிடம் தாய் குறித்து கேட்டுள்ளனர். 



 

அதற்கு வயதான தாய் செண்பகம் உடல்நலக்குறைவால் உயிரிழந்து விட்டதாகவும், அவரை வீட்டில் இருந்த ட்ரம்மில் போட்டு  சிமெண்ட் வைத்து பூசி மூடி விட்டதாகவும் கூறியுள்ளார்.  இதுகுறித்து நீலாங்கரை போலீசாருக்கு அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.



 

நீலாங்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று  விசாரணை நடத்தி, ட்ரம்மில் கிடந்த  86 வயதான மூதாட்டியின் உடலை, ட்ரம்மில் இருந்து எடுக்க முடியாத காரணத்தால், ட்ரம் உடன் சேர்த்து பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையால் முதற்கட்டமாக நடத்திய விசாரணையின் அடிப்படையில் 174 பிரிவின் கீழ் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 



இது குறித்து காவல்துறையினரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, ”செண்பகம் காணாமல் போனது குறித்து முறையான தகவல் தெரிவிக்காததால், சுரேஷின் அண்ணன் பாபு, நேரடியாக வீட்டிற்கு சென்று, சுரேஷிடம் விசாரித்துள்ளார். இதில் பயந்துபோன சுரேஷ், தாயார் உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிட்டதாகவும், தன்னிடம் காசு இல்லாததால் என்ன செய்வதென்று தெரியாத மனக்குழப்பதால், இறந்த தாயாரை ட்ரம்மில் போட்டு, சிமெண்ட் பூசி மூடிவிட்டதாக தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சுரேஷின் அண்ணன், உடனே நீலாங்கரை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், தற்போது விசாரணை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்து உள்ளோம். பிரேத பரிசோதனைக்கு பிறகே உரிய காரணம் தெரியவரும்” என காவல்துறையினர் தெரிவித்தனர்.