காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 44 வது வார்டுக்கு உட்பட்ட வேதாச்சலம் நகர் பகுதியிலுள்ள செல்வ விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த  ஓய்வு பெற்ற ஆசிரியர் கருணாகரன்(80) மற்றும்  ஓய்வு பெற்ற மாவட்ட வருவாய் அலுவலர் சிவகாமி (75). இத்தம்பதியினருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ள நிலையில் மகளுக்கு திருமணம் ஆகி கணவருடன் வசித்து வருகிறார். மகன் ஹரிகரன் (48) இவரின் மனைவி வரலட்சுமி திருமணமாகி இதே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.



 

ஹரிஹரன்  தனியார் நிறுவனங்களுக்கு எரிபொருள் சப்ளை செய்யும் பணி செய்து வந்த நிலையில்  கடந்த 2001 ஆம் ஆண்டு காஞ்சிபுரம் நகராட்சி தேர்தலில் 44 வது வார்டுக்கு  சுயேச்சையாக போட்டியிட்டு  வெற்றிப்பெற்று நகர மன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில்  கடந்த ஆண்டு மே மாதம் 10-ஆம் தேதியன்று  திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு ஹரிகரன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.



மகன் ஹரிஹரன் இறந்த துக்கம் தாங்க முடியாமல் பெற்றோர் கருணாகரன் மற்றும் சிவகாமி ஆகியோர் தனது மகன் ஹரிகரனின் முழு திரு உருவ சிலையை செய்து வழிபாடு நடத்த முடிவு செய்து மாமல்லபுரத்தில் உள்ள சிற்பக் கலைக் கூட்டத்தில் ரூபாய் 2.5 லட்சம் மதிப்பில் ஹரிஹரனின் உயரமான 5.3 அடி உயரத்தில்  தத்துரூபமாக ஹரிகரன் போலவே முழு திரு உருவ சிலையை  தயார் செய்தனர். அதன்பிறகு தன் மகனின் சிலைக்கு  பேண்ட் சட்டை போட்டவாறு அவருக்கு பிடித்த வண்ணத்தில் வண்ணம் பூசி தாங்கள் வசித்து வரும் வீட்டின் முன்பு ஓர் பகுதியில் அச்சிலையினை பெற்றோர் கருணாகரன் மற்றும் சிவகாமி நிறுவியுள்ளனர்.



இந்நிலையில்  ஹரிஹரன் நினைவில் முதலாம் ஆண்டான நேற்று  ஹரிஹரனின்  நெருங்கிய  நண்பர்கள் முன்னிலையில் திறப்புவிழா நடைபெற்றுள்ளது.  தற்போது தனது மகன் ஹரிஹரனின் சிலைக்கு அவர்களது பெற்றோர்கள் தினந்தோறும் பூஜை செய்து கற்பூர தீப ஆராதனை காண்பித்து அவரை தங்களது குல தெய்வமாக பாவித்து வழிபாடு செய்து வணங்கி வருகின்றனர். இறந்த மகனுக்கு தத்ரூபமாக முழு திருவுருவ சிலை அமைத்து தினந்தோறும்  பூஜை  செய்து வழிபாடும் செய்யும் நிகழ்வு  அப்பகுதியில் உள்ள அனைவரிடத்திலும் பெரும் நெகிழ்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.