சென்னை (Chennai News): சென்னை கிழக்கு கடற்கடற்கரை சாலை, கானத்தூரில் தனியார் கடல்சார் பல்கலைகழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பிரசாந்த் (22), என்ற மாணவர் GME என்ற படிப்பை முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்தநிலையில்  மாணவருக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் உடற்பயிற்சி (parade) இருந்துள்ளது. பயிற்சியாளர் புருஷோத்தமன் கட்டாயப்படுத்தி செய்ய வலியுறுத்தியதால், தான் ரத்தவாந்தி எடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மாணவரின் நண்பர்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். 

 

பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினர்

 

இதனால் சக மாணவர்கள் இறப்பிற்கு கட்டாய பயிற்சி தான் காரணம் என கூறி, நேற்று இரவு 10:30 மணி முதல் கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கானத்தூர் காவல்துறையினர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை மாணவர்கள் கைவிட்டனர். 

 

பணியிடை நீக்கம் செய்த நிர்வாகம்

 

மீண்டும் மாணவர்கள் மறியலில் ஈடுபடாமல் இருக்க காவல்துறையினர் கல்லூரி வாயிலில் குவிக்கப்பட்டனர். மாணவர்களின் போராட்டத்தை தொடர்ந்து பயிற்சியாளர் முன்னாள் இராணுவ வீரரான புருஷோத்தமன் பணி நீக்கம் செய்யப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர். மேலும் புருஷோத்தமனிடம் இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் விளக்கம் கேட்டு இருப்பதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சக நண்பன் உடல் நலக்குறைவால், உயிரிழந்த நிலையில் மாணவர்கள் கிழக்கு கடற்கரை சாலையில் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் கானாத்தூர் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.