சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அடுத்த செட்டிநாடு காவல் நிலையம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். அர்ச்சகரான இவர் வீட்டில் கன்றுகளுடன் 2 மாடுகளையும், சினையுடன் ஒரு மாட்டையும் வளர்த்து வந்தார்.  இந்த மாடுகளின் மதிப்பு 1.5 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. கடந்த 12 ஆம் தேதி இந்த மாடுகள் திருடு போனது. இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்து நடவடிக்கை இல்லாததால், ரமேஷ் பல்வேறு இடங்களில் தேடி வந்தார். சில நாட்களுக்கு முன்பு ஆன்லைனில் கன்றுக்குட்டியுடன் ஒரு மாடு விற்பனைக்கு உள்ளதாக அறிவிப்பு வந்தது. அதில் இருந்த மாட்டின் புகைப்படத்தை பார்த்து தனது மாடுதான் என ரமேஷ் உறுதி செய்தார். மேலும் சினையாக இருந்த அந்த மாடு கன்றை ஈன்றுள்ளது. இதனால் கன்றுக் குட்டியுடன், மாட்டை விற்பதாக அறிவித்திருந்தனர். இது குறித்து ரமேஷ் காவல்துறையில் தகவல் கொடுத்தார்.

 

இதை சற்று கவனிக்கவும் -*Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*



 


 

காவல்துறையினர் யோசனைப்படி ரமேஷ், அந்த மாட்டை வாங்கி கொள்வதாக ஆன்லைனில் விளம்பரம் செய்தவர்களிடம் மொபைல் எண்ணில் தெரிவித்தார். இதையடுத்து அக்கும்பலைச் சேர்ந்தவர்கள் திருப்பத்தூரை அடுத்த கம்பனூர் அருகே கொங்கறுத்தியில் உள்ள ஒரு தனியார் தோட்டத்துக்கு வருமாறு ரமேஷிடம் தெரிவித்தனர். அங்கு ரமேஷ் மற்றும் காவல் துறையினர் சென்ற போது அவரிடம் திருடப்பட்ட 3 மாடுகளும், அதன் கன்று குட்டிகளும் இருந்தன. ஆனால் மாட்டை திருடிய கும்பல் தலைமறைவானது. தோட்டக்காரர்களிடம் விசாரித்த போது, மூன்று பேர் இங்கு வந்து கன்று குட்டிகளுடன் மாடுகளை விட்டுச் சென்றதாக தெரிவித்தனர். இதையடுத்து கன்றுக் குட்டிகளுடன் 3 மாடுகளையும் காவல்துறையினர் மீட்டனர். காவல்துறை விசாரணையில், மாடுகளை திருடி விற்க முயன்றது காரைக்குடி கழனிவாசல் மற்றும் குன்றக்குடியைச் சேர்ந்த இருவர் எனத் தெரியவந்தது.

 

இந்த திருட்டு சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில்: சிவகங்கை மாவட்டத்தில் இது போன்ற நூதன திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இது குறித்து வழக்குகள் பதிவு செய்துள்ளோம். மாட்டை திருடி ஆன்லைனில் விற்பனை செய்த கொள்ளையர்கள் குறித்த விவரங்கள் கிடைத்துள்ளது விரைவில் அவர்களை கைது செய்வோம் என தெரிவித்தனர்.