மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி இரவு சுமார் 10:30க்கு தீ விபத்து ஏற்பட்டது. வீர வசந்தராயர் மண்டபத்தில் தூண்கள் சேதமடைந்தது. கோயிலில் உள்ள  சுமார் 36 கடைகளும் தீ பற்றி எரிந்தது. இந்த சம்பவம் தமிழ்நாடு முழுதும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மீனாட்சியம்மன் கோவிலுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் பார்வையிட்டு சென்றனர். சுமார் 20 கோடியை தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்து பணிகளை வேகப்படுத்தியது. ஆனால் மூன்று ஆண்டுகளுக்கு மேலாகியும் தற்போது வரை அதன் வேலைப்பாடுகள் முடிவடையாமல் இருப்பதாக மதுரை மக்கள் வேதனை தெரிவித்தனர்.



 

இது தொடர்பாக (ABP nadu) இணைய செய்தித் தளத்தில் "குறைந்தது உள்ளூர் பக்தர்களின் வருகை ; பொலிவு பெறுமா மீனாட்சியம்மன் கோவில் !" என்ற தலைப்பில் கடந்த சில நாட்களுக்கு முன் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் தற்போது நாமக்கல்லில் இருந்து கற்தூண்களை மதுரைக்கு கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டது, இதைத் தொடர்ந்து நாமக்கல்லில் இருந்து கனரக வாகனங்களில் கற்கள் ஏற்றப்பட்டு,  மதுரை அவனியாபுரம் அருகே உள்ள செங்குளத்தில் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலுக்குச் சொந்தமான தோட்டத்தில் கற்கள் வைக்கப்பட்டு தூண்கள் செதுக்கும்  பணிகள் தொடங்கியுள்ளது.




 

இது குறித்து சமூக ஆர்வலர் காளமேகம் நம்மிடம்...," மீனாட்சியம்மன் கோயிலை மீண்டும் சீர்படுத்த ராசிபுரத்தில் இருந்து கற்கள் கொண்டு வரப்படுவதாக. சொல்லப்பட்டது. ஆனால் மூன்று ஆண்டுகளுக்கு மேலாகியும் ஒரு கற்கள் கூட கோயிலுக்குள் கொண்டு வரப்படவில்லை. எனவே விரைவாக கற்கள் கொண்டுவந்து வேலைகளை முடிக்க வேண்டும். கோயிலில் வேலைகள் முழுமையாக முடிந்தால் தான் கும்பாபிஷேகம் நடத்த முடியும். மீனாட்சியம்மன் கோவிலில் கனமழையால் தண்ணீர் முழுமையாக சூழ்ந்தது. அதற்கு பின் தீ விபத்து ஏற்பட்டது. இப்போது கோயில் பணிகள் முடிக்க தடை ஏற்படுகிறது. எனவே ஆகம விதிப்படி கோயிலுக்கு பிரசன்னம் பார்க்க வேண்டும்" என கேட்டுக் கொண்டார்.



 

மேலும் கோவில் நிர்வாகம் சார்பாக சிலர்..., " கொரோனா காலகட்டம் என்பதால் தான் கற்கள் கொண்டுவர சிரமம் ஏற்பட்டது. அதே போல் எடுக்கும் கற்கள் அனைத்து தொடர்ந்து உடைந்து கொண்டே இருந்தது. பழமையான முறைப்படி சரி செய்ய வேண்டும் என்பதால் கோயில் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. தற்போது மதுரைக்கு கற்கள் கொண்டுவரும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் முடிந்துவிடும்" என்றனர்.

 

மீனாட்சியம்மன் கோவில் மதுரையின் மிகப்பெரும் அடையாளம். இந்நிலையில் கோயில் பணிகள் தொய்வு ஏற்படுத்தாமல் விரைவாக முடித்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும், என்பது மதுரை மக்களின் கோரிக்கையாக உள்ளது.