தமிழ்நாட்டில் இன்று முதல் அனைத்து கோயில்களும் திறக்கப்பட உள்ள நிலையில், பல முக்கிய திருத்தலங்களில்  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.


தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கு காரணமாக கோயில்கள் கடந்த ஏப்ரல் மாதம் முதல் மூடப்பட்டு, பக்தர்கள் வழிபாடு செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டது. ஆனால், கோயில்களில் தினமும் வழக்கமாக நடைபெறும் பூஜைகள் மட்டும் நடைபெற்று வந்தன. கோயில்களில் அனுமதிக்கப்படாததால் பக்தர்கள் மிகுந்த கவலையில் இருந்தனர்.


இந்த நிலையில், தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வந்ததை தொடர்ந்து, ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வந்தன. இந்த தளர்வில் கோயில்களும் திறக்க அனுமதி வழங்கப்பட்டன. அதன்படி, கடந்த வாரம் சில மாவட்டங்களில் கோயில்கள் திறக்கப்பட்டன. கடந்த 2ஆம் தேதி தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 12ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கில், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கு ஒரே மாதிரியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த தளர்வுகளின்படி, தமிழ்நாட்டில் நாளை முதல் அனைத்து கோயில்களும் திறக்கப்பட உள்ளது. இதனால், தூய்மை செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.


திறக்கப்படுகிறது பழனி முருகன் கோவில்... பக்தர்களுக்கான விதிமுறைகளும் அறிவிப்பு - விவரம்!


தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் உள்பட அனைத்து மத வழிபாட்டு தலங்களும் திறப்படுவதால், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோயில்களில் தூய்மை செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கோயில்களில் பணி செய்யும் பணியாளர்கள் கோயில்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதேபோல், மசூதிகள், கிறிஸ்துவ ஆலயங்களில் வழிபாடு நடத்துவதற்கு உரிய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.




நெல்லையில் உள்ள நெல்லையப்பர் கோயில், தஞ்சை பெரிய கோயில், திருச்சி ஸ்ரீரங்கம் கோயில், நாகையில் உள்ள நாகூர் தர்கா மற்றும் வேளாங்கண்ணி பேராலயத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன.


மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வழிபட வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, கோயிலில் 5ஆம் தேதி முதல் காலை 6-12.30 மற்றும் மாலை 4-8 வரை பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோயிலில் நடைபெறும் காலபூஜை, அபிஷேகங்களை காண பக்தர்களுக்கு அனுமதியில்லை. மேற்கு மற்றும் வடக்கு நுழைவுவாயில் வழியே பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். கோயிலில் தரிசனம் செய்தபின் எந்த ஒரு இடத்திலும் உட்கார பக்தர்களுக்கு அனுமதியில்லை. கோயிலுக்குள் தேங்காய், பழம் கொண்டு வரவும், அர்ச்சனை செய்வதற்கும் அனுமதியில்லை.


மேலும், ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலில் புனித தீர்த்தங்களில் நீராட பக்தர்களுக்கு தடை விதித்த கோயில் நிர்வாகம், தரிசனத்திற்கு மட்டும் அனுமதி வழங்கியுள்ளது.


தேனி: 2ஆயிரம் ஆண்டு பழமை.. கண்ணகி சிலை.. மெய்சிலிர்க்க வைக்கும் மேலச்சொக்கநாதர் வரலாறு!