மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சமணர்கள் வாழ்ந்ததற்கான ஆதரரங்கள் பல இடங்களில் தென்பட்ட வண்ணம் உள்ளன. கள்ளிக்குடிக்கு அடுத்த கே.வெள்ளாகுளம் கிராமத்திற்கு அருகே உள்ள  குகைத்தளம் பகுதியில் சமணர்கள் வாழ்ந்ததற்கான தடையங்கள் இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் பாண்டிய நாடு பண்பாட்டு மைய வரலாற்று ஆர்வலர் அருண்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார். சமணத்தடையங்கள் ஆய்வு குறித்து ஏபிபி நாடு செய்தி நிறுவனத்திடம் பேசிய அருண்சந்திரன், இந்த குகைத்தளம் 1500 முதல் 1800 ஆண்டுகள் பழமையானது எனவும் குகையில் சமணர் படுக்கைகள் அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் மட்டும் இங்கு நடந்துள்ளதாக தெரிவித்தார். மொத்தம் 7 படுக்கைகள் அமைக்கும் பணி நடந்துள்ள நிலையில்  நூல் பிடித்தது போல அழகாக வரிசையாக  படுக்கைகளை அமைத்திருக்கின்றனர்.




ஒவ்வொரு படுக்கையும் நான்கு அடி அகலத்தில் அமைத்திருக்கிறார்கள். குகைக்கு உள்ளே, குகைக்கு வெளியே என இரண்டு பகுதிகளிலும் மருந்து அரைக்க பயன்படும் மருந்து குழிகள் அமைக்கபட்டுள்ளன. மழை பெய்தால்  நீர் வழிந்தோட குகை தளத்தின் வாயிலின் தரை தளத்தில் சிறிய வாய்க்கால் போன்ற அமைப்பும் காணப்படுகிறது. சிறப்பாக ஆரம்பிக்கப்பட்ட இந்த பணி ஏதோ ஒரு காரணத்தால் பாதியில் நிறுத்தப்பட்டது. தற்போது இந்த குகைக்குள் ஆஞ்சநேயர் சிற்பம் ஒன்று உள்ளது. இந்த குகையை உள்ளூர் மக்கள் ’பொந்துப்பாறை’ என்று அழைக்கிறார்கள். இந்த பாறையின் உச்சியில் ஒரு முருகன் கோவில் ஒன்று உள்ளது. மேலும் இந்த பகுதியை ஆய்வு செய்தால் இன்னும் நிறையை வரலாற்று சான்றுகள் வெளிப்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.


மேலும் இது குறித்து மேலும் சில தொல்லியல் ஆர்வலர்கள் நம்மிடம் பேசும்போது ”சமணம் என்ற சொல் சிரமண என்னும் வட நாட்டுச் சொல்லின் திரிபு என்றும் அதனால், சிரமணர்  தமிழில்  சமணர் என அழைக்கப்பட்டனர். சமணர் என்பதற்கு மகிழ்ச்சி - கவலை ஆகிய இரண்டையும் சமமாக கருதுபவர் என்று பொருள்; இதனை நட்பு, பகை அற்றவர்கள் என்றும் கூறலாம். மேல் இருந்து கீழாக ஒழுகுவது போல் எல்லா இடங்களிலும் பரவ வேண்டியவை ஒழுக்கம். அந்த ஒழுக்கத்தை உயிரினும் மேலாகக் காப்பவர் என்று விரிவான பொருளைத் தருவதாகவும் கொள்ளலாம் எனவும் பழமையான வேதமாகிய ரிக்வேதம் சமணத்தை போற்றுகிறது எனவும் அவர்கள் கூறினர்.




மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Karankadu Eco Tourism : காரசார நண்டு, கடல் பயணம், காரங்காடு சூழல் சுற்றுலா.. கண்டிப்பா ஒரு டூர் போடுங்க..!


பாண்டிய நாட்டில் முன்பே ’சமணம்’ கால் பதித்திருந்தால் வடநாட்டு துறவிகளின் வருகையும் செயல்பாடுகளும் புதியதொரு ஊக்கத்தை உண்டு செய்தது எனலாம். ஆக, தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கி.மு.3 - ம் நூற்றாண்டிலேயே சமண மதம் பரவி இருந்ததாக அறிகிறோம். இக்கருத்தை உறுதிபடுத்த நமக்கு உதவுவது ஆங்காங்கே கிடைக்கும் சமணர் தொடர்புடைய கல்வெட்டுகளாகும். இத்தகைய கல்வெட்டுகள் தமிழ்நாட்டில் அச்சரப்பட்டி, மாங்குளம், திருப்பரங்குன்றம், தேனி ஆகிய இடங்களில் இன்றளவும் காணப்படுகின்றன. இந்நிலையில் மதுரை வெள்ளாகுளம் கிராமத்தில் சமணத்திற்கான சின்னங்கள் இருப்பது பெறுமையான” ஒன்று என்றனர்.