தஞ்சாவூர்: தென்னை ஒரு கற்பக விருட்சம். இதனுடைய அனைத்து பாகங்களும் பயன் தரக்கூடியதாக உள்ளது. தேங்காய் தென்னிந்திய சமையலில் முக்கிய இடத்தைப் பெறுகிறது. இதன் தாவரவியல் பெயர் கோக்கஸ் நியூசிஃபெரா ஆகும். சங்க நூல்கள் தென்னை மரத்தை ‘தெங்கு’ என்று கூறும். இதற்கு ‘தாழை’ என்ற பெயரும் உண்டு. நூறு ஆண்டுகள் வரை உயிர் வாழ்ந்து பயன் தரக்கூடியது தென்னை மரம். விவசாயி வளர்க்கும் மரங்களில் தென்னை ஒன்று தான் தினமும் விவசாயிக்கு கைமாறு செய்கிறது. தென்னையை குறிப்பிட்ட இடைவெளியில் நடுவதன் மூலம் சூரிய ஒளியை பயன்படுத்தி மாவு பொருள் தயார் செய்கிறது. சூரிய வெளிச்சம் கிடைக்காத போது பூக்கள் வளர்ச்சிக்கான ஹார்மோன் உற்பத்தியும் தடைபடுகிறது. எனவே சரியான இடைவெளியில் தென்னை நாற்றுகளை நடவு செய்வது அவசியமாகிறது. தென்னையில் நிலையான விளைச்சலைப் பெற 25×25 அடி இடைவெளியில் நட வேண்டும். வளர்ச்சி அடைந்த தென்னையின் வேர்பகுதி ஒரு கன மீட்டர் சுற்றளவு இருக்க வேண்டும். ஒரு கன மீட்டரில் சுமார் 7500 வேர்கள் உற்பத்தியாகிறது. எனவே 3×3×3 அடி குழிகள் தென்னங்கன்று நடுவதற்கு ஏற்றதாகும். இவ்வாறு நடப்படும் மரங்களில் பாளைகள் 45 மாதங்களில் வெளி வருகின்றன. மேலும் தண்டு பகுதி, அடி முதல் நுனி வரை சீராக காணப்படும். இவ்வாறு நடப்படும் மரங்கள் புயலினால் பாதிப்படையாமல் நன்கு வளரும் தன்மை கொண்டிருக்கும். இவ்வாறு நடவு செய்வதால் எக்டருக்கு 175 மரங்கள் சதுர முறையில் நட முடியும். வாய்க்கால் ஓரத்திலும், வரப்புகளிலும் ஒற்றை வரிசையாக நடவு செய்யும் போது 20 அடி இடைவெளியில் நட வேண்டும். முக்கோண முறையில் 22 அடி இடைவெளியில் குட்டை ரகங்களை எக்டேருக்கு 236 மரங்களும், 25 அடி இடைவெளியில் நடும் போது 205 மரங்களும் நடலாம்.
தென்னையில் காய்க்கும் திறன் அதிகரிக்க என்ன செய்யலாம்? - வேளாண் துறை யோசனை
என்.நாகராஜன் | 18 Apr 2023 03:33 PM (IST)
தென்னையை குறிப்பிட்ட இடைவெளியில் நடுவதன் மூலம் சூரிய ஒளியை பயன்படுத்தி மாவு பொருள் தயார் செய்கிறது. சூரிய வெளிச்சம் கிடைக்காத போது பூக்கள் வளர்ச்சிக்கான ஹார்மோன் உற்பத்தியும் தடைபடுகிறது.
தென்னை மரம்
Published at: 18 Apr 2023 03:33 PM (IST)