தஞ்சாவூர்: விவசாயிகளின் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச  ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று தஞ்சாவூரில் நடைபெற்ற விவசாயிகள் விடுதலை முன்னணி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பில் விவசாயிகளின் பிரதான கோரிக்கைகளை முன்வைத்து பேரணியும், மாநாடும் நடைபெற்றது. இந்திய நாடு மிகப் பிரதானமாக விவசாய நாடாகும். நாட்டின்  முதுகெலும்பாக விவசாயிகள் இன்று வரை திகழ்து வருகின்றனர். ஆனால்     நாடு விடுதலை பெற்ற சுமார் 75 ஆண்டு காலமாக விவசாயிகள் வாழ்க்கையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. உணவு உற்பத்தியில் மிகப்பெரிய சாதனைகளை செய்து நாட்டு மக்கள் அனைவரும் பசியாற தினந்தோறும் பாடுபட்டு வருகின்றனர்.

இருப்பினும் விவசாயிகளின் பொருளாதார நிலை மட்டும் இன்னும் உயரவே இல்லை. விவசாயிகள் விளைவிக்கின்ற விளைபொருட்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்காததால் சிறு, குறு விவசாயி முதல் பெரிய விவசாயிகள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் வாழ்க்கை நிலைமையில் மாற்றம் வேண்டும். விவசாயத்தில் முன்னேற்றம் வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பில் தஞ்சாவூர் ரயில் நிலையத்திலிருந்து பேரணி புறப்பட்டது.

பேரணியில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. பேரணி தஞ்சை பழைய பேருந்து நிலையம் மாநகராட்சி திடல் வந்தடைந்து மாநாடு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு விவசாயிகள் விடுதலை முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் கம்பம் மோகன் தலைமை வகித்தார்.

மாவட்ட அமைப்பாளர் ராமலிங்கம் கொடியேற்றினார். பொருளாளர் ராவணன் வரவேற்புரை நிகழ்த்தினார். தாளாண்மை உழவர் இயக்க தலைவர் கோ.திருநாவுக்கரசு, சமவெளி விவசாயிகள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பழனிராஜன், தமிழக விவசாயிகள் சங்கம் சின்னதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மக்கள் அதிகாரத்தின் மாநில பொருளாளர் காளியப்பன், மக்கள் கலை இலக்கிய கழக மாநில இணைச்செயலாளர் ராவணன், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி மாநில தலைவர் பழனி, மாநில பொதுச் செயலாளர் அன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாநிலச் செயலாளர் சாமி. நடராஜன், தமிழ்நாடு விவசாய சங்க மாநில செயலாளர் மாசிலாமணி, அகில இந்திய விவசாயிகள் மகாசபை மாநில பொதுச் செயலாளர் சந்திரமோகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் தேசிய ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் புருஷோத்தம் சர்மா, பெங்களூரு உயர் நீதிமன்ற வழக்கறிஞர் பாலன், விவசாயிகள் விடுதலை முன்னணி மாநில பொருளாளர் செல்வராஜ் ஆகியோர் மாநாட்டின் நோக்கங்கள் குறித்து சிறப்புரையாற்றினார்கள். மாநாட்டு தீர்மானங்களை மாவட்ட அமைப்பாளர் ரவி வாசித்தார். விவசாய புரட்சியும் மக்கள் திரள் பாதையும் தோழர் ரங்கநாதன் வாழ்க்கை பயணம் நூல் வெளியீட்டை மாவட்ட அமைப்பாளர் அம்பேத்கர் வெளியிட்டார். 


முன்னதாக மக்கள் கலை இலக்கியக் கழக மையக் குழு கலைக்குழு மற்றும் இசை சமர்கலைக் குழுவினரின் புரட்சிகர கலை நிகழ்ச்சி நடைபெற்றது. முடிவில் மயிலாடுதுறை மாவட்ட பொருளாளர் சுப்பிரமணியன் நன்றி கூறினார். மாநாட்டில் விவசாயிகளின் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச  ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.