தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் விதை விற்பனை உரிமங்கள் வைத்துள்ள விதை விற்பனையாளர்கள் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தங்களுடைய விதை விற்பனை உரிமத்தை புதுப்பிக்க வேண்டும். இதை கண்டிப்பாக செய்ய வேண்டும் என்று விதை ஆய்வு துணை இயக்குனர் விநாயகமூர்த்தி அறிவுறுத்தி உள்ளார்.



இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தஞ்சை, பட்டுக்கோட்டை மற்றும் கும்பகோணம் உள்ளிட்ட கோட்டங்களில் நெல், உளுந்து, நிலக்கடலை, தென்னங்கன்றுகள், காய்கறி நாற்றுகள், காய்கறி விதைகள், சோளம், பழச்செடிகள் உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள் மற்றும் இவற்றை கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு விற்பனை செய்பவர்கள், கட்டாயம் விதை சட்ட விதிகளின்படி, விதை விற்பனை உரிமம் பெற்று விற்பனை மேற்கொள்ள வேண்டும். இது மிகவும் முக்கியமானது.

இதுவரை மாவட்டத்தில், அரசு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்கள் மூலமாக விண்ணப்பித்த 590 விற்பனையாளர்கள் அனைவருக்கும் விதை கட்டுப்பாட்டு ஆணையின் கீழ் 5 ஆண்டுகளுக்கு விற்பனை மேற்கொள்ள புதிய விதை விற்பனை உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளது.

விதை விற்பனையாளர்கள், விதை உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்து விற்பனை செய்யும்போது, அவற்றின் ரகம், விலை குறிப்பிட்டுள்ள இன்வாய்ஸ் பெற்று, விதை இருப்பு பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். விதைகளை விவசாயிகளுக்கு விற்பனை செய்யும்போது, பயிர், ரகம், நிலை, அளவு, காலாவதி, உற்பத்தியாளர் விவரம், நாற்று எண்ணிக்கை, விற்பனை விலை ஆகிய விவரங்களுடன் விவசாயிகளின் கையெழுத்துடன் ரசீது வழங்க வேண்டும்.

விதை விற்பனை நிலையம் முன்பு, நிலையத்தின் பெயர் பலகையும், விதை இருப்பு மற்றும் விலைப்பட்டியல் அடங்கிய இருப்பு பலகை முழு விவரங்களுடன் வைத்து இருக்க வேண்டும். விதைச்சட்டவிதிகளை கடைபிடிக்காமல், விதிகளை மீறி விற்பனை செய்யும் விதை விற்பனையாளர்கள் மீது விதை சட்ட விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தரமான விதைகள், தரமான தென்னங்கன்றுகள் மற்றும் நாற்றுகளை விவசாயிகளுக்கு விற்பனை மேற்கொள்ள புதிய லைசென்சு பெற விரும்புபவர்கள் தஞ்சை அருகே காட்டுத் தோட்டத்தில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த விதை வளாகத்தில் உள்ள விதை ஆய்வு துணை இயக்குனர் அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பம் சமர்ப்பித்து, விதை கட்டுப்பாடு ஆணையின் கீழ் உரிமம் பெற்றுக்கொள்ளலாம்.

தொடர்ந்து தங்களின் விதை விற்பனை உரிமத்தை உரிமம் வழங்கப்பட்ட தேதியில் இருந்து, 5 ஆண்டுகள் முடியும் தேதியான காலகெடுவுக்குள் புதுப்பிப்புதொகையாக ரூ.500 மட்டும் செலுத்தி, தொடர்ந்து அடுத்த 5 ஆண்டுகளுக்கு விதை விற்பனை உரிமத்தினை புதிப்பித்து, விதை சட்ட விதிகளை பின்பற்றிதரமான விதை விநியோகம் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.