வரலாற்று சிறப்பும், பெருமையும் வாய்ந்த நகரம் தஞ்சாவூர். உலகப் பெருமை வாய்ந்த பெரிய கோயிலும், இதை சார்ந்த பல்வேறு பெருமைகளும் ஏராளம்...ஏராளம். தஞ்சை மாநகரம் என்றாலே கோயில்கள்தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும்.


இக்கோயில்களும் அதன் தேரோட்டமும் ஆன்மீகத்தின் கல்வெட்டுகளில் பதியப்பட்ட ஒன்று. இந்த தேரோட்டத்தோடு தொடர்புடையவைதான் தேர் நிலைகள். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கர்ப்பக்கிரகத்தில் இருக்கும் மூலவர் அருள்பாலிப்பது போல், தன்னை நேரில் வந்து வழிபட முடியாத பக்தர்களுக்கு அவர்கள் இருக்கும் இடத்துக்கே சென்று உற்சவரான சுவாமிகள் காட்சி கொடுப்பது தான் வீதியுலாவும், தேரோட்டமும்.


இதில் மிக முக்கியமான ஒன்று தேர் எந்த அளவிற்கு உயரமாக கட்டப்படுகிறதோ அதன் பீடம் வரை, அதன் அருகில் தேர் நிலைகள் கட்டி வைக்கப்பட்டு, அதில் சுவாமிகளை அமர வைத்து தேரோட்ட காலத்தில் பக்தர்கள் வழிபடுவது வழக்கம். இந்த தேர்நிலைகளை காலப்போக்கில் தேர்முட்டிகள் என்று பேச்சு வழக்கில் மருவி தற்போது அந்த பெயரே நிலைத்து நிற்கிறது.




 
அதன்படி தஞ்சாவூரில் தேரோடும் வீதிகளான தெற்குவீதி, மேலவீதி, வடக்கு வீதிகளில் தேர்நிலைகள் எனப்படும் தேர்முட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு கோயிலுக்கும் இந்த தேர்முட்டிகள் மராட்டிய மன்னர்கள் காலத்தில் செங்கல் மற்றும் சுண்ணாம்பு கலவைகளால் கட்டப்பட்டு, கோபுரங்களுடன் நான்கு பக்கம் தூண்களும், ஏறி இறங்க படிகளுடன் அதில் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சிற்பங்களும் வடிவமைக்கப்பட்டிருந்தது. இதன் வடிவமைப்பே மனதை கொள்ளைக் கொள்ளும். இந்த தேர்நிலைகள் தமிழர்களின் வேலைப்பாட்டை வெளிக் கொணரும் வகையில் சிறப்பாக அமைக்கப்பட்டு இருந்தன.


தஞ்சாவூர் மேலவீதியில் கொங்கேனஸ்வரர் கோயில், பிரதாபவீர அனுமன் கோயில், விஜயராமர் கோயில், தெற்கு வீதியில் சங்கரநாராயணன் கோயில் ஆகியவற்றுக்கு தேர்நிலைகள் உள்ளது. வேகமான கால ஓட்டத்தில் இந்த தேர்நிலைகள் காலப்போக்கில் தனியாரால் ஆக்கிரமிப்புக்குள்ளாகி, அதில் வீடுகளை கட்டி குடியேறியதுதான் கொடுமை. அதிலிருந்த சுதை சிற்பங்களும் உடைந்து சேதமானது. சில தேர்நிலைகள் என்ன ஆனது என்றே தெரியாத நிலையில் இருந்தது. இப்படி நம் பெருமைகள் ஆக்கிரமிப்பில் சிக்கி இருந்தது.


இந்நிலையில்தான் தஞ்சாவூரில் அழிவின் விழிம்பில் இருந்த தேர்நிலைகளை மீட்டு, அதனை பழமை மாறாமல் மீட்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் செலவில் தஞ்சாவூரில் மேலவீதி, தெற்கு வீதியில் உள்ள நான்கு தேர்நிலைகளும் சீரமைக்க முடிவு செய்யப்பட்டது.




தொடர்ந்து அதிகாரிகள் பழைய ஆவணங்களை கொண்டு தேர்நிலைகளை கண்டறியும் பணிகளில் இறங்கினர். தொடர்ந்து தேர்நிலைகளில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. பின்னர் தொல்பொருள் துறை அனுமதியோடு பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இதில் பிரதாபவீர ஹனுமன் கோயில், விஜயராமர் கோயில் தேர்நிலைகளின் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. பழமைமாறாமல் இந்த தேர்நிலைகளை காணும் பக்தர்கள் தங்களை மறந்து லயித்து பார்க்கின்றனர்.


இதேபோல் கொங்கனேஸ்வரர் கோயில், சங்கரநாராயணன் கோயில் தேர் நிலைகள் புதுப்பிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலக கல்வெட்டு ஆய்வாளர் மணிமாறன் கூறுகையில், மராட்டிய மன்னர் காலத்தில் தஞ்சாவூரில் தேரோடும் வீதிகளில் தேர் நிலைகள் கட்டப்பட்டுள்ளது. முன்பு அந்தந்த கோயிலுக்கு தேர் இருந்திருக்கலாம். ஆனால் காலப்போக்கில் தஞ்சாவூர் பெரிய கோயில் தேரோட்டம் நடைபெறும் போது, இந்த தேர்நிலைகளில் அந்தந்த கோயில்களின் சுவாமிகள் தேர் நிலைகளில் அமரவைத்து பக்தர்களுக்கு அருள்பாலித்துள்ளனர்.




பெரிய கோயில் தேரோட்டம் நூறாண்டுகளுக்கு பின்னர் கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்றது. அப்போதும் கூட இந்த தேர்நிலைகள் பயன்படுத்த முடியவில்லை. காரணம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் இருந்ததுதான். ஆனால், தற்போது ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டு இந்த தேர்நிலைகள் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளது பொதுமக்களிடமும், வரலாற்று ஆர்வலர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்றார்.


தேரோடும் ராஜவீதிகளில் ஆக்கிரமிப்பில் இருந்த தேர்நிலைகள் மீட்கப்பட்டு, அதனை தொல்பொருள் துறையின் அனுமதி, வழிகாட்டுதலோடு பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளதை காணும் பக்தர்கள், தஞ்சையின் பெருமை கோயில்களும், தேர்களும்தான். காலப்போக்கில் இவை நடக்காமல் இருந்ததால் தேர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டு தற்போது மீட்கப்பட்டுள்ளது என்றனர். தஞ்சையின் பெருமை இன்னும் உள்ளது. அவற்றிலும் ஆக்கிரமிப்புகள் உள்ளன. அவற்றையும் மீட்க வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பு.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண