தஞ்சாவூர்: தஞ்சை அருகே நாஞ்சிக்கோட்டை பகுதியில் மக்காச்சோளம் அறுவடை தீவிரமாக நடந்து வருகிறது. ஆனால் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். இருப்பினும் வியாபாரிகள் உடனுக்குடன் கொள்முதல் செய்து பணம் பட்டுவாடா செய்வதால் உற்சாகத்தில் உள்ளனர். தஞ்சை மாவட்டம் நாஞ்சிக்கோட்டை பகுதியில் உள்ள சூரியம்பட்டி, மருங்குளம், ஏழுபட்டி, மின்னாத்தூர், குருங்குளம், தங்கப்ப உடையான்பட்டி, தோழகிரிபட்டி, கொத்தம்பட்டி, திருக்கானூர்பட்டி உள்ளிட்ட பல்வேறு மேட்டுப்பகுதி கிராமங்களில் உள்ள விவசாயிகள் கோடை சாகுபடியாக மக்காச்சோளத்தை சாகுபடி செய்திருந்தனர். தற்போது மக்காச்சோளம் அறுவடையை மேற்கண்ட பகுதியில் விவசாயிகள் தீவிரமாக செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு ஏக்கருக்கு 20 குவிண்டால் முதல் 30 குவிண்டால் வரை மகசூல் கிடைத்ததாகவும், ஆனால் தற்போது 15 குவிண்டாலில் இருந்து 20 குவிண்டால் வரை மட்டுமே மகசூல் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். சில பகுதிகளில் கடந்த ஆண்டு போலவே 30 குவிண்டால் வரை மகசூல் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு மக்காச்சோளத்தை வாங்கிய வியாபாரிகள் குவிண்டால் ரூ. 2500 வரை வாங்கிச் சென்றனர். ஆனால் தற்போது அதனுடைய விலை குறைந்து ரூ.2300- க்கு வியாபாரிகள் வாங்குகின்றனர். மேலும் அறுவடை செய்து வரும் சோளம் ஈரமாக இருப்பதால் மேலும் விலை குறைத்து வியாபாரிகள் கேட்பதால் அறுவடை செய்த சோளத்தை நெடுஞ்சாலையில் பரவலாக கொட்டிவைத்து காய வைக்கும் நிலை உள்ளது.
தஞ்சை அருகே மக்காச்சோளம் அறுவடை தீவிரம்; விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை
என்.நாகராஜன் | 02 Oct 2023 01:47 PM (IST)
மகசூல் குறைந்தது... விலையும் வீழ்ச்சியடைந்தது: ஒரு புறம் சோகமும் பணம் உடனே கிடைப்பதால் மறுபுறம் மகிழ்ச்சியடையும் விவசாயிகள்
மக்காச்சோளம்
Published at: 02 Oct 2023 01:47 PM (IST)