டெல்டா மாவட்டங்களின் உயிர்நாடியான காவிரி நீர் இருந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் காவிரி நீர் ஆனது மேட்டூர் அணையில் ஜூன் 12 -ம் தேதி திறக்கப்படும். ஆனால் பல சமயங்களில் மேட்டூர் அணையில் போதிய நீர் இல்லாததாலும், நீர்வரத்து குறைவு காரணமாக ஜுன் 12 -ம் தேதி திறக்கப்படாமல் காலம் தள்ளி திறக்கும் நிலையும் ஏற்படும். இதனால் விவசாயம் பெரிதும் பாதிப்படையும்.
இந்த சூழலில் இந்தாண்டு ஜுன் 12 -ல் மேட்டூரில் இருந்து காவிரி தண்ணீர் திறக்கப்படுமா? என நீண்ட எதிர்பார்ப்புகளுடன் விவசாயிகள் காத்திருத்தனர். இந்நிலையில் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்குத் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து காவிரி நீரை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, காவிரி நீர் படிப்படியாக பயணித்து மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட நீர், ஜூன் 15 ஆம் தேதி கல்லணையை வந்தடைந்தது. அங்கிருந்தும் முதலமைச்சர் ஸ்டாலின் தண்ணீர் கொள்ளிடம் மற்றும் காவிரி ஆறுகளில் திறந்து விட்டார். தொடர்ந்து அந்த நீரானது மயிலாடுதுறை மாவட்டம் எல்லைக்கு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வந்தடைந்தது.
திருவாலங்காடு விக்ரமன் தலைப்புக்கு வந்து சேர்ந்த காவிரி
கல்லணையில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர், படிப்படியாக பல்வேறு கால்வாய்கள் வழியாகப் பயணித்து, 19 -ம் தேதி மதியம் மயிலாடுதுறை மாவட்ட எல்லையான திருவாலங்காடு விக்ரமன் தலைப்பு நீரொழுங்கியை வந்தடைந்தது. இது மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. காவிரி நீர்வரத்து மாவட்டத்திற்குள் நுழைந்ததை அடுத்து, நீர்வள ஆதாரத்துறையினர் விரைந்து செயல்பட்டனர். விக்ரமன் தலைப்பு நீரொழுங்கியில் இருந்து வினாடிக்கு 800 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நீர், பல்வேறு பாசன வாய்க்கால்கள் வழியாகப் பாய்ந்து, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்ந்தவும், பாசனத்திற்கும் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
நள்ளிரவில் துலா கட்டத்தை அடைந்த காவிரி நீர்
அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் மயிலாடுதுறை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள காவிரி துலா கட்டத்தை வந்தடைந்தது. துலாக்கட்டம் வந்தடைந்த காவிரி நீரை துலா கட்ட பாதுகாப்பு குழுவினர் சிறப்பு பூஜைகள் செய்து பக்தியுடன் பூஜைகள் செய்து கற்பூர தீபாராதனை காட்டி வரவேற்று மகிழ்ந்தனர். காவிரி துலா கட்டம் என்பது மயிலாடுதுறை நகரத்தின் ஆன்மீக மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகுதியாகும். ஐப்பசி மாதத்தில் நடைபெறும் துலா உற்சவம் இங்கு பிரசித்தி பெற்றதாகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த துலா கட்டத்தை காவிரி நீர் வந்தடைந்தது, அதனை அப்பகுதி மக்களுக்கு ஒரு ஆன்மீக நிகழ்வாக கொண்டாடினர்.
கடைசி கதவணையில் காவிரி
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மேலையூரில் அமைந்துள்ள காவிரி ஆற்றின் கடைசி கதவணையை வந்தடைந்தது காவிரி நீர். குடகு மலையில் உருவாகும் காவேரி ஆறு பல்லாயிரம் மையில்கள் கடந்து மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் கடலில் சங்கமிக்கும் இடத்தில் கலக்கும். அதற்கு முன்னர் மேலையூர் கிராமத்தில் காவிரி ஆற்றின் கடைசி கதவணை அமைந்துள்ளது.
காவேரி தண்ணீர் இக்கதவணையை வந்தடைந்த பின்னர் தேக்கி வைத்து ஓவ்வொரு பாசன ஆறுகள் மற்றும் கிளை வாய்க்கால்களுக்கும், பெருந்தோட்டம் ஏரிக்கும் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இந்த சூழலில் கடந்த 12 -ம் தேதி தமிழக முதல்வரால் மேட்டூரில் திறக்கபட்ட தண்ணீர் இன்று காவேரியின் கடைமடை பகுதியான மேலையூர் உள்ள கடைசி கதவணைக்கு வந்தடைந்தது. அப்போது அங்கு காத்திருந்த விவசாயிகள் பூஜையில் செய்து காவேரி தண்ணீரை மலர்தூவி வணங்கி வரவேற்றனர்.
மேலும் முறை வைக்காமல் தொடர்ந்து தண்ணீர் வழங்க தமிழகர அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் மேலையூர், கருவி, இராதாநல்லூர், மேலப்பெரும்பள்ளம், கீழப்பெரும்பள்ளம், சாவடி உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கிராமத்தை சுற்றி சுமார் 50 ஆயிரம் ஏக்கர் சம்பா சாகுபடி நிலங்கள் பயன்பெரும்.