தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர் நாள் கூட்டத்தில் கடைமடைப் பகுதிக்கு தண்ணீர் வராதது குறித்தும், பயிர் காப்பீட்டு தேதியை நீட்டிக்கவும் விவசாயிகள் வலியுறுத்தினர்.

Continues below advertisement


தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் பா. பிரியங்கா பங்கஜம் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில் விவசாயிகள் பேசியதாவது: 


தோழகிரிப்பட்டி பி. கோவிந்தராஜ்: காவிரி நீர் வீணாகக் கடலில் கலப்பதற்கு பதிலாக கட்டளை மேட்டு வாய்க்காலுக்கு திருப்பிவிட்டு, வல்லம் பகுதியிலுள்ள ஏரி, குளங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். பயிர் காப்பீட்டு தேதியை நீட்டிக்க வேண்டும். விவசாயிகள் பலவகையிலும் சிரமப்பட்டு சாகுபடி செய்கின்றனர். அவர்களின் நிலையை உணர்ந்து பயிர் காப்பீட்டு தேதியை நீட்டிக்க வேண்டும். 


களத்தூர் கோபிநாத்: மேட்டூர் அணை திறக்கப்பட்டு ஒன்றரை மாதமாகியும் கடைமடைப் பகுதிக்கு தண்ணீர் வரவில்லை. கடலில் வீணாகக் கலக்கும் காவிரி நீரை பாசனத்துக்கு திருப்பி விட வேண்டும்.


ராயமுண்டான்பட்டி என்.வி. கண்ணன்: புதிய கட்டளை மேட்டு வாய்க்கால், உய்யகொண்டான் நீட்டிப்பு கால்வாயில் தண்ணீர் விடப்பட்டாலும், குறைவாக இருக்கிறது. விநாடிக்கு 400 கன அடி வீதம் விடப்படும் தண்ணீரை 1,100 கன அடியாக உயர்த்தினால்தான், விவசாயத்துக்கு பயன் தரும். கல்லணைக் கால்வாயில் சேதுபாவாசத்திரம் பகுதிக்கு இன்னும் தண்ணீர் சென்றடையவில்லை.


கலெக்டர்: கல்லணைக் கால்வாயில் விநாடிக்கு 3,500 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. விநாடிக்கு 4,000 கன அடி வீதம் விடலாம் என கருதுகிறோம். ஆனால், கரை உடைந்து எங்களது பகுதி வயல்கள் பாதிக்கும் என இடைப்பட்ட பகுதி விவசாயிகள் கூறுகின்றனர். என்றாலும், கடைமடைப் பகுதியில் கிடைக்காத பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.


முன்னாள் எம்எல்ஏ குத்தாலம் பி. கல்யாணம்: மயிலாடுதுறை அருகே கட்டப்பட்ட தடுப்பணை செயல்பாட்டுக்கு வராததால், தண்ணீர் வீணாகக் கடலுக்கு செல்கிறது. எனவே இத்தடுப்பணையைச் செயல்பாட்டுக்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


ஏ.கே.ஆர். ரவிச்சந்தர்: நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஒரு ஏக்கருக்கான சிட்டா, அடங்கல் தரும் விவசாயிகளுக்கு 60 மூட்டைகள் அல்லது 70 மூட்டைகள் நெல் மட்டுமே வரையறை வைத்து கொள்முதல் செய்யப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு 90 மூட்டைகளுக்கு மேல் கொள்முதல் செய்ய முடியாது என அலுவலர்கள் கூறுவதைத் தவிர்த்து, அனைத்து மூட்டைகளையும் கொள்முதல் செய்ய வேண்டும்.


சிவவிடுதி வி.கே. சின்னதுரை: காவிரியில் ஒரு லட்சம் கன அடி வீதம் தண்ணீர் சென்றாலும், முக்கொம்பிலிருந்து காவிரியில் விநாடிக்கு 28,000 கன அடி வீதம் மட்டுமே தண்ணீர் விடப்படுகிறது. இதனால், முதன்மை ஆறுகளில் கடைசி வரை தண்ணீர் சென்றாலும், வாய்க்கால்களுக்கு தண்ணீர் சரியாக வரவில்லை. ஏரிகள், குளங்களுக்கும் தண்ணீர் சென்றடையவில்லை.


ஆம்பலாப்பட்டு அ. தங்கவேல்: கல்லணைக் கால்வாயிலிருந்து எட்டுப்புலிக்காடு வாய்க்காலுக்கு தண்ணீர் சரியாக விடப்படாததால், ஆம்பலாப்பட்டு பகுதியிலுள்ள ஆண்டாள் ஏரி, குரும்பை குளம் உள்ளிட்டவற்றுக்கு தண்ணீர் செல்லவில்லை. இது தொடர்பாக கள ஆய்வு செய்து, தண்ணீர் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.


வெள்ளாம்பெரம்பூர் துரை. ரமேஷ்: சம்பா, தாளடிக்கு ஏற்ற விதை நெல் ரகங்கள் தனியாரிடம் வாங்கும்போது தரக்குறைவு, அதிக விலை உள்ளிட்டவற்றால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, வேளாண் விரிவாக்க மையங்களில் அதிகமாக இருப்பு வைத்து விற்பனை செய்ய வேண்டும். இவ்வாறு விவசாயிகள் பேசினர்.