இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஆடி அமாவாசையான இன்று காமேஸ்வரம் கடற்கரையில் ஆயிரக் கணக்கானோர் முன்னோர்களை வழிபாடு  செய்து கடலில் நீராடினர்.

 

ஆடி அமாவாசையில் விரதமிருந்து மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்தால் அனைத்து வளங்களும் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும். இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ராமேஸ்வரம் சென்று அங்கு புனித கடலில் நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம். இந்த நிலையில் ராமேஸ்வரம் செல்ல முடியாதவர்கள் ராமேஸ்வரம் சென்று தர்ப்பணம் செய்து திதி கொடுக்கலாம் என செவி வழி வரலாறை ஒட்டி இன்று நாகை மாவட்டம் காமேஸ்வரத்தில் உள்ள கடற்கரையில் நாகை, காரைக்கால், திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரம் கணக்கானோர் வந்திருந்து முன்னோர்களுக்கு பூஜை பொருட்களுடன் தர்பணம் கொடுத்து திதி செய்து கடலில் நீராடினார்கள்.

 



 

கொரோனோ அச்சம் காரணமாக தை, ஆடி அமாவாசைகளில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்த நிலையில் தற்போது ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். இவர்களிடம் புரோகிதர்கள் தட்சணைக்கு பதிலாக கட்டாய கட்டணம் செலுத்த கட்டாயப்படுத்துவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.  கீழையூர் போலீசார் 50க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.