Water Tank Poisoned | தண்ணீர் தொட்டியில் விஷம் பள்ளியில் நடந்த கொடூரம் சிக்கிய ஸ்ரீராம் சேனா தலைவர்
மதவெறுப்பின் உச்சமாக பள்ளி தண்ணீர் தொட்டியில் இந்துத்துவா கும்பல் விசத்தை கலந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் சவதாட்டி தாலுகாவில் இருக்கிறது ஹுலிகட்டி கிராமம். இந்த கிராமத்தில் அரசுப்பள்ளியும் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டியில் தான் அடையாளம் தெரியாத சிலர் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஜூலை 14 ஆம் தேதி இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. விசம் கலந்த தண்ணீரை குடித்த 41 மாணவர்கள் பாதிக்கப்பட்டாலும் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.
இச்சூழலில் தான் இந்த கொடூர செயலில் ஈடுபட்டவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கினார்கள். இதனிடையை, வலதுசாரி இந்துத்வா இயக்கமான ஸ்ரீராம் சேனாவின் சவதாட்டி தாலுகா தலைவர் சாகர் பாட்டீல் என்பவர் தான் இந்த கொடூர செயலில் ஈடுபட்டார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், இவருடன் சேர்ந்து இதே இயக்கத்தைச் சேர்ந்த இரண்டு நபரும் இந்த செயலில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து கைது செய்யப்பட்டவர்கள் காவல்துறையினறிடம் கொடுத்த வாக்குமூலம் தான் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. அதில், சம்பந்தப்பட்ட பள்ளியில் முஸ்லிம் தலைமை ஆசிரியர் பணியாற்றி வருவதாகவும் அவர் மீது பழி சுமத்தி வேறு பள்ளிக்கு மாற்றுவதற்காக தான் பள்ளி தண்ணீர் தொட்டியில் விஷம் கலந்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளனர். மத வெறியின் உச்சமான இந்த சம்பவத்தை கண்டித்து பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். கர்நாடகா மாநில முதலமைச்சர் சித்தராமையா வெளியிட்டுள்ள அறிக்கையில், மத அடிப்படைவாதமும் வகுப்புவாத வெறுப்பும் கொடூரமான செயல்களுக்கு வழிவகுக்கும், மேலும் அப்பாவி குழந்தைகள் படுகொலை செய்யப்படுவதற்கு வழிவகுத்திருக்கக்கூடிய இந்த சம்பவம் அதற்கு ஒரு சான்றாகும்.கருணையே மதத்தின் வேர் என்று போதித்த ஷரன்களின் நிலத்தில் இவ்வளவு துணிச்சலும் வெறுப்பும் எழ முடியுமா? இந்த தருணத்தில் கூட என்னால் அதை நம்ப முடியவில்லை. மதத்தின் பெயரால் சமூகத்தில் வெறுப்பை விதைத்து, இப்படிப்பட்ட அரசியலை செய்கின்றனர் பாஜகவினர் .வெறுப்புப் பேச்சுக்கள் மற்றும் வகுப்புவாத கலவரங்களைத் தடுக்க நாங்கள் ஒரு சிறப்புப் பணிக்குழுவை உருவாக்கியுள்ளோம்.
அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். பொதுமக்கள் இத்தகைய சக்திகளுக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும், புகார்களை அளிக்க வேண்டும். இதுபோன்ற கொடூரமான செயல்களைச் செய்த குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் தகுந்த தண்டனை வழங்கும் என்று நான் முழுமையாக நம்புகிறேன்" என்று கூறியுள்ளார்.