Watch Video: நிச்சயதார்த்த மேடைக்கே சென்று மணப்பெண்ணை தன்னுடன் அழைத்துச் செல்ல முயன்ற பெண்ணை உறவினர்கள் சரமாரியாக தாக்கினர்.

வாயடைக்கச் செய்த சம்பவம்:

உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் சமீபத்தில் ஒரு வியத்தகு சம்பவம் அரங்கேறியுள்ளது. அதில் ஒரு பெண் நிச்சயதார்த்த விழாவிற்குள் சினிமா பாணியில் புகுந்து,  மேடைக்கு ஏறி செய்த சம்பவம் அங்கு கூடியிருந்த விருதினர்களை வாயடைக்கச் செய்துள்ளது.

காந்தி பார்க் காவல் நிலையப் பகுதியில் உள்ள ரூபி ஹோட்டலில் நடைபெற்ற நிச்சயதார்த்தம் ஒரு மகிழ்ச்சியான நிகழ்வாக முடிவுற இருந்தது. முதுகலைப் பட்டதாரியான மணமகள், அலிகரின் குவார்சி பகுதியைச் சேர்ந்த ஒருவரை மணக்கவிருந்தார். ஆனால், அந்த தம்பதி மேடையில் ஒன்றாக அமர்ந்தபோது, ​​ஒரு பெண் திடீரென மேடையேறி மணமகளை தன்னுடன் அழைத்துச் செல்ல முயன்றார். இந்த சம்பவத்தின் காணொளி தற்போது வைரலாகி வருகிறது.

வைரலாகும் வீடியோ:

வைரலாகும் வீடியோவில், “தம்பதி மேடையில் அமர்ந்திருக்க ஒரு பெண் ஆவேசமாக வந்து மேடையேறி அவர்கள் அருகில் சென்றார். மணப்பெண்ணை இழுத்து தன்னுடன் வருமாறு அழைத்து கத்தி கூச்சலிட்டுள்ளார். மணமகள் அந்த பெண்ணின் வாயை கையால் அடைக்க முயன்றார். ஆனால், அந்த பெண் தொடர்ந்து கத்தியபடி மணப்பெண்ணை தன்னுடன் வருமாறு இழுத்துள்ளார். உடனே அங்கே வந்த மணப்பெண்ணின் உறவினர்கள், பிரச்னை செய்த பெண்ணை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றுள்ளனர். ஆனால், அவரோ மணப்பெண்ணை கட்டிப்பிடித்துக் கொண்டு அங்கிருந்து நகர மறுத்துள்ளார்.

மேடையில் சூழ்ந்த மணப்பெண்ணின் உறவினர்கள் பிரச்னை செய்த பெண்ணை குண்டுக்கட்டாக தூக்கி சரமாரியாக தாக்கி மேடையில் இருந்து கீழே தள்ளினர். அங்கிருந்த கூட்டத்தின் மத்தியில் அந்த பெண் பேசதொடங்கியதும், மணப்பெண்ணின் உறவினர்கள் மீண்டும் தாக்க தொடங்கினர். இதனால் கூச்சல் குழப்பத்துடன் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது” தொடர்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

4 வருட உறவு?

பினா என்ற அந்தப் பெண், தானும் மணமகளும் நான்கு வருடங்களாக லிவ்-இன் உறவில் இருந்ததாக தெரிவித்துள்ளார். மணமகளின் வேண்டுகோளின் பேரில், இருவரும் சேர்ந்து வாழ்வோம் என்ற நம்பிக்கையில் மூன்று வரன்களை நிராகரித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.  தானும் மணமகளும் முதன்முதலில் ஒரு பயிற்சி மையத்தில் சந்தித்ததாகவும், பின்னர் 2021 இல் ஒரு திருமண கொண்டாட்டத்தின் போது நெருக்கமானதாகவும் தெரிவித்தார். தங்களிடையேயான பிணைப்பு காலப்போக்கில் ஆழமடைந்தது, சேர்ந்து வாழ்வது குறித்தும் விவாதித்துள்ளனர். 

ஏமாற்றிய மணமகள்?

தொடர்ந்து பினா பேசுகையில், “எனது குடும்பத்தினர் எனக்காக வரன் தேடத் தொடங்கியபோது, ​​அதனை நிராகரிக்கும்படி அவள் என்னிடம் கேட்டார்கள். நான் அவள் சொன்னதைக் கேட்டேன். ஆனால், அவளுடைய சொந்த திருமணம் என்று வந்தபோது, ​​எனக்காக அதை நிராகரிக்க அவள் மறுத்துவிட்டாள்” என குறிப்பிட்டார். ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை மணமகள் முற்றிலுமாக மறுக்க, விழா அரங்கில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. தொடர்ந்து இந்த விவகாரத்தில் காவல்துறையும் தலையிட வேண்டி இருந்தது. இறுதியில் மணப்பெண் மீதான ஓரினச்சேர்க்கை குற்றச்சாட்டு காரணமாக, மணமகன் குடும்பத்தினர் திருமணத்தையே ரத்து செய்துள்ளனர்.