தஞ்சாவூர்: அழகில் மட்டுமில்லை... வீரத்திலும் சளைத்தவர்கள் இல்லை பெண்கள் என்பதை உணர்த்தும் வகையில் தஞ்சை மாவட்டம் திருமண்டங்குடியில் உள்ள மிகவும் பழமைவாய்ந்த திருபுவனேஸ்வரர் கோயில் உள்ள சிற்பங்கள் விளக்குகின்றன.


பெண்களின் வீரத்தை போற்றும் சிற்பங்கள்


தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ளது திருமண்டங்குடி. இங்குள்ளது திருபுவனேஸ்வரர் கோயில் உள்ளது. மிக பழமை வாய்ந்தது இந்த சிவன் கோவில். இக்கோவில் கருவறை கோமுகியில் ( அபிஷேகம் செய்யும் தீர்த்தம் வெளி வரும் பாதை) பெண்களின் வீரத்தை போற்றும் வகையிலான சிற்பங்கள் உள்ளன.


பழமையான கோவில்களில் ஆண்களின் வீரச்செயலை போற்றும் வகையிலான சிற்பங்கள் ஏராளமாக இருப்பதை பார்த்திருப்போம். ஆனால் இக்கோயில்களில் பெண்களின் வீரத்தை போற்றும் சிற்பங்கள் அந்த காலத்திலேயே வடிக்கப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.


வேறெங்கும் காண கிடைக்காத அரிய சிற்பங்கள்


இக்கோயிலில் உள்ள சிற்பங்கள் தமிழகத்தில் வேறெங்கும் காண கிடைக்காத அரிய சிற்பங்களாகும். நடுகற்களில் ஊர் மக்களை காக்கும் பொருட்டு, ஆண்கள் கையில் ஆயுதம் ஏந்தி விலங்குகளை தாக்குவது போன்ற சிற்பங்கள் இருக்கும். ஆனால் இங்கு உள்ள சிற்பங்களில் பெண்கள் கையில் ஆயுதம் ஏந்தி நிற்கிறார்கள்.


கருவறை கோமுகியில் அமைக்கப்பட்டுள்ள சிற்பங்கள்


இக்கோவில் கருவறை கோமுகியில் இத்தகைய அரிய சிற்பங்கள் காணப்படுகின்றன. யாழி ஒன்று யானையை துரத்த, யானை குதிரையை துரத்த, ஒரு பெண் பயந்து மரத்தில் தொற்றிக் கொண்டிருக்கிறாள். மற்றொரு பெண் சிறிய வாள் ஒன்றை கையில் ஏந்தி காட்டுப்பன்றி போன்ற ஒரு விலங்கை கழுத்தில் தாக்கும் காட்சிகள் சிற்பங்களாக அழகாக வடிவமைக்கப்பட்டு உள்ளன.


மூன்றாம் ராஜராஜன் காலத்தை சேர்ந்த கல்வெட்டுகள்


அதேபோல நாட்டியமாடும் பெண்கள், சங்கநாதம் ஒலிக்கும் சிவ கணங்களின் சிற்பங்கள் வரிசையாக வடிவமைக்கப்பட்டுள்ளன. 3-ம் ராஜராஜன் (13-ம் நூற்றாண்டு) காலத்தை சேர்ந்த இக்கல்வெட்டுகள் இக்கோவிலில் உள்ளன. சோழர் காலத்தில் திருப்பணி நடந்த கோவில்களில் இதுவும் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.


முன்னோர்கள் பெண்கள் மீது வைத்திருந்த மரியாதை


பல அரிய சிற்பங்கள் இக்கோவிலில் ஏராளமாக உள்ளன. அக்காலத்திலேயே பெண்களின் கலை நயத்தையும், வீரத்தையும் எந்த அளவுக்கு போற்றியிருந்தால் கோயில் கருவறை கோமுகியில் மக்கள் வழிபடுமிடத்திலேயே இந்த சிற்பங்களை அமைத்திருப்பார்கள் என்று எண்ண தோன்றுகிறது. நம் முன்னோர்கள் பெண்களின் மீது வைத்திருந்த மரியாதையும் கண் முன் தெரிகிறது. வீரமங்கைகளை போற்றியும் வந்துள்ளனர் என்பதும் தெரிய வருகிறது.


தஞ்சை மாவட்டத்தில் உள்ள பழமையான கோயிலில் பெண்களின் வீர செயல்களை போற்றும் வகையிலான கற்சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.