வாட்ஸ்அப் குரூப்பில் உறுப்பினர்கள் சேருவதில் புதிய மாற்றங்கள் விரைவில் கொண்டு வரப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. 


உலகம் முழுவதும் அதிகமாக பயன்படுத்தப்படும் சமூக வலைதளங்களில் ஒன்று வாட்ஸ் அப். மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ் அப் தளம் அவ்வப்போது சில அப்டேட்களை அளித்து வரும் நிலையில் பயனாளர்களின் வசதிக்கேற்ப எதிர்கால அப்டேட்டுகளையும் திட்டமிட்டு வருவதாக தெரிவித்திருந்தது. ஏற்கனவே செய்தியை நீக்குவது, ஸ்டேட்டஸில் ஒலி இல்லாமல் செய்வது, செய்திகளுக்கு ரியாக்ட் செய்வது, ஸ்டிக்கர்ஸ், கைரேகை என பல அப்டேட்டுகளை கடந்த காலங்களில் வழங்கியிருந்தது. 


அந்த வகையில் வாட்ஸ்அப் குரூப்களில் அட்மின்களின் அனுமதி இல்லாமல் லிங்க் மூலமாக இணையும் வசதி ஏற்கனவே வழங்கப்பட்டிருந்தது. இது பல அந்நிய நபர்களால் தவறான தகவல் அனுப்பப்படுவதோடு சமூக பிரச்சினைக்கும் வழி வகுப்பதாக கருதப்பட்டது. இப்பிரச்சினையை களைய நிர்வாக ஒப்புதல் என்ற புதிய முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இனி குரூப்பில் இணைய அட்மின்களின் அனுமதி அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அட்மின்களால் குரூப்களில் சேர விரும்புபவர்களின் கோரிக்கைகளை ஏற்கவும், நிராகரிக்கவும் முடியும். 




முந்தைய அப்டேட்டுகள்


பயனாளர்களின் பாதுகாப்பும் மிக முக்கியம் என்பதால் இந்த அப்டேட்டுகள் கவனத்துடன் கையாளப்படுகிறது. இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு வாட்ஸ்அப்பில் பல அப்டேட்டுகள் வெளியானது. அதன்படி ஏற்கனவே வாட்ஸ்அப் குரூப்களில் அதிகப்பட்சமாக 256 உறுப்பினர்களை நேரடியாகவும், லிங்க் மூலமும் இணைக்கலாம் என்ற நடைமுறை இருந்தது. இந்த வசதி மாற்றப்பட்டு 512 ஆக இரட்டிப்பு செய்யப்பட்டது. 


இதேபோல் வாட்ஸ்அப் செயலியில் ஆடியோ கால் பேசும் போது இதுவரை 8 நபர்கள் மட்டுமே ஒரே சமயத்தில் இணைக்க முடியும் என்ற நிலை இருந்தது. இது 32 ஆக உயர்த்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஃபைல்களை பகிரும் அளவும் அதிகரிக்கப்பட்டது. இதுவரை 100 எம்.பி. அளவிலான ஃபைல்களை மட்டுமே பகிர முடியும் என்ற நிலை மாற்றப்பட்டு தற்போது 2 ஜிபி வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கு காரணம் சக போட்டி நிறுவனமான டெலிகிராம் குறுகிய காலத்தில் 1.5 ஜி.பி. அளவிலான ஃபைல்களை பகிரும் வசதியை தனது பயனாளர்களுக்கு வழங்கியிருந்ததே ஆகும். 


மேலும் வாட்ஸ் அப்பில் தகவல்களை டெலிட் செய்ததும் அதனை மீட்டெடுக்க முடியாத நிலை இருந்தது. அது அப்டேட் செய்யப்பட்டு undo என்ற ஆப்ஷன் ஸ்கீரினின் கீழ் பகுதியில் சில வினாடிகள் தோன்றும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண