6G Network In India: 6ஜி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதில் இந்தியா உலகிற்கு முன்னோடியாக திகழும் என்று மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா கூறியுள்ளார்.


சென்னை ஐஐடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்களிடையே ஜோதிர் ஆதித்ய சிந்தியா உரையாற்றினார்,அவர் பேசியதாவது “ 4ஜி தொழில்நுட்பம் உலகில் அறிமுகமானபோது, இந்தியா உலகைப் பின்பற்றியது , 5ஜி அறிமுகமானபோது உலகத்தோடு இணைந்து பயணித்தது, 6ஜி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதில் உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழும் என்று தெரிவித்தார்.


கைப்பேசிகள்: 


1993-ம் ஆண்டில் செல்பேசி அறிமுகமானபோது இந்தியாவில் முதன்முதலாக 6 நகரங்களில் மட்டுமே அது அறிமுகப்படுத்தப்பட்டது. இன்று இந்திய அளவில் 117 கோடி கைபேசிகள் செயல்பாட்டில் உள்ளது. இணையதள இணைப்புகளை பொறுத்தவரை 10 ஆண்டுகளுக்கு முன்பு 25 கோடி இணைப்புகள் இருந்தன. தற்போது அது 97 கோடியாக அதிகரித்துள்ளது.


10 ஆண்டுகளுக்கு முன்பு அகண்ட  அலைவரிசை இணைப்புகள் இந்தியாவில் 6 கோடியாக இருந்தது. தற்போது 94 கோடி இணைப்புகள் உள்ளன. பாரத்நெட் திட்டத்தின் கீழ், நாட்டில் உள்ள 2 லட்சத்து 46 ஆயிரம் கிராமப்புறங்களில் இணையதள இணைப்புகள் வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தப் புரட்சிகரமான திட்டத்தின் காரணமாக இந்தியா தொழில்நுட்பத்தின் மையமாக மாறும் என அமைச்சர் தெரிவித்தார்.




இந்தி்யாவில் முதல் இடம்:


என்ஐஆர்எஃப் தர வரிசையில் சென்னை ஐஐடி இந்தியாவிலேயே முதல் இடத்தில் உள்ளது. மாணவர்கள் தங்களது கல்விக்குப் பின்னர் வாழ்க்கையை தொடங்கும்போது, படித்த நிறுவனத்துக்கும், நாட்டுக்கும் பயனுள்ள வகையில் பங்காற்ற வேண்டுமென்று அவர் கேட்டுக் கொண்டார்.


5ஜி தொழில்நுட்பத்தை அதிவேகமாக செயல்படுத்தும் நாடாக இந்தியா திகழ்கிறது என்று கூறிய அவர், நகர்ப்புறப் பகுதிகளில் 98 சதவீதம் இந்த தொழில்நுட்பம் பரவியுள்ளது என்று கூறினார்.


இந்தியாவை தொலைத்தொடர்பு உற்பத்தி மையமாக மாற்றுவதற்கான பணிகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது என்று கூறிய அவர், அதற்கான கட்டமைப்புக்களை உருவாக்கும் ஆயத்தப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.