கடந்த 3 ஆண்டுகளில் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளம் காரணமாக கோடிக்கணக்கான இளம் பயனாளர்களின் மன நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக பேஸ்புக் நடத்திய ஆய்வு முடிவிலேயே தெரியவந்து உள்ளதாக பிரபல ஆங்கில ஊடகமான வால் ஸ்ட்ரீட் ஜோர்னல் தெரிவித்து உள்ளது. இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான பேஸ்புக்கின் ஆவணங்களில் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டு இருப்பதாக வால் ஸ்ட்ரீட் ஜோர்னல் குறிப்பிட்டு உள்ளது.


குறிப்பாக இன்ஸ்டாகிராம் செயலி பெரும் அளவிலான பதின் பருவ இளம் பெண்களுக்கு ஆபத்தானதாக மாறி இருப்பதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. அதாவது இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் மூன்றில் ஒரு இளம் பெண் தனது உடல் குறித்து கவலைப்படுவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதனை பயன்படுத்தும் இளம் பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் தங்களுக்கு பயமும், தாழ்வு மனப்பான்மையும் ஏற்படுவதாக தெரிவித்து உள்ளனர்.




இத்தகைய பிரச்சனை குறித்து அறிந்தும் பேஸ்புக் நிறுவனம் அதை தடுக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் குறைவான அளவிலான முயற்சி செய்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. பேஸ்புக் பைல்ஸ் என்ற பெயரில் வால் ஸ்ட்ரீட் ஜோர்னல் வெளியிட்டுள்ள பதிவு பேஸ்புக் நிறுவனத்துக்கு தலைவலியாக மாறி உள்ளது.


பேஸ்புக், யூடியூப், வாட்ஸ் அப்புக்கு பிறகு உலகளவில் அதிகம் பிரபலமான சமூக வலைதளம் என்றால் அது இன்ஸ்டாகிராம் தான். இதுகுறித்து பலரும் அறிந்திராத நேரத்திலேயே "இன்ஸ்டாகிராமத்தில் வாடி வாழலாம்" என தளபதி பாடிய மறுநொடியே அதில் வெறித்தனமாக கணக்கு தொடங்கி கெத்து காட்டினர் விஜய் ரசிகர்கள்.


புகைப்பட கலைஞர்கள், பிரியர்களை ஈர்ப்பதற்காக கொண்டு வரப்பட்ட இன்ஸ்டாகிராமில் தரமான புகைப்படங்களுக்கு கேரண்டி. ஏராளமான பில்டர்களையும் வசதிகளையும் கொடுத்து புகைப்பட பிரியர்களை தன் வசப்படுத்தியது இன்ஸ்டாகிராம்.


இதை பிரபல சமூக வலைதளமான பேஸ்புக் வாங்கிய பிறகு வேற லெவல் ஹிட் ஆனது. 80ஸ் கிட்ஸ்களுக்கு 90ஸ் கிட்ஸ்களுக்கு ஒரு பேஸ்புக் போல், இப்போது உள்ள 2K கிட்ஸ்களுக்கு இன்ஸ்டாகிராம் தான் ஆஸ்தான சமூக வலைதளமாக செயல்பட்டு வருகிறது.




தற்போது இதை பயன்படுத்தி வருபவர்கள் எண்ணிக்கை 1.214 பில்லியன். அதாவது 121 கோடி. இந்த அளவுக்கு பிரபலமான இன்ஸ்டாகிராமில் பிராப்ளங்களும் அதிகம். ஆம், நிதி மோசடி தொடங்கி பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் வரை ஏராளமான குற்றங்கள் இன்ஸ்டாகிராமத்தில் நடக்கின்றன. குறிப்பாக இந்தியாவில் டிக் டாக் தடைக்கு பிறகு இன்ஸ்டாகிராமில் அறிமுகம் செய்யப்பட்ட ரீல்ஸ் என்ற வீடியோ வசதி மூலம், INFLUENCERS என கூறிக்கொள்ளும் பலர் போலியான, தரமற்ற நிறுவனங்களை, பொருட்களை விளம்பரம் செய்வது வருகின்றனர்.


அதுபோல் டிக்டாக் மூலம் அரங்கேறிய அனைத்து குற்றங்களும், இன்ஸ்டாகிராமத்துக்கு ரீல்ஸ் வழியாக வந்தடைய தொடங்கி இருக்கிறது. குறிப்பாக 18 வயதுக்கு மேற்பட்டோர் மட்டுமே பார்க்க அனுமதிக்கப்படும் ஆபாச வீடியோக்களை சிறுவர்கள் பார்க்கும் நிலை ஏற்பட்டது.