A for ஆப்பிள்,  B for பால், C for கேட், D for டாக் என்ற வரிசை வரும் போது,  G for என்றால் கூகுள் என்று தான் இப்போதுள்ள குழந்தை கூட கூறும். அந்த அளவிற்கு எல்லாம் கூகுள் மயம். கூகுள் எந்த அளவு பிரசித்தமோ, அதன் சிஇஓ சுந்தர் பிச்சையும் பிரசித்தமானவர். உலகை உள்ளங்கையில் இருந்து விரல் நுனிக்கி நகர்த்திச் சென்றதில் பெரும்பங்காற்றியவர் . இன்று 49 வது பிறந்தாளை கொண்டாடும் சுந்தர்பிச்சை தமிழர் என்பதும், உலகம் ஒரு தமிழனின் விரல் அசைவில் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதும் நமக்கு பெருமையே!




மதுரை டூ கலிபோர்னியா!


‛மதுரையை சுற்றும் கழுதை... ஊர் தாண்டாது’ என்று இன்றும் மதுரைவாசிகளை ஜாலியாக கலாய்ப்பார்கள். ஆனால், உலக நாடுகளை இணைக்கும் இணைய அரசனாக திகழும் கூகுளின் முதன்மை செயல் அலுவலரான சுந்தர் பிச்சை பிறந்தது அதே மதுரையில் தான். ரகுநாத பிச்சை-லட்சுமி தம்பதிகளுக்கு 1972 ஜூன் 10ல் பிறந்த சுந்தர் பிச்சை, படித்து வளர்ந்தது எல்லாம் சென்னை. சென்னை ஜவகர் வித்யாலயாவில் பத்தாம் வகுப்பும், வனவாணி பள்ளியில் பிளஸ் 2 முடித்த சுந்தர் பிச்சைக்கு அடிப்படை கல்வியை ஊட்டி வளர்த்தது தமிழ்நாடு. மேற்கு வங்கத்தில் கரக்பூரில் உலோகப் பொறியியல் முடித்த சுந்தர் பிச்சைக்கு அதுவரை, மிடியல் கிளாஸ் வாழ்க்கை தான். அமெரிக்கா பறக்க தயாராகும் அந்த நொடி வரை அவருக்கான அறிவுக்கல்வியை வழங்கியது இந்தியாவும், அதனுள் அடங்கும் தமிழ்நாடும் தான். 




தேட வைத்தவரை தேடிய உலகம்!


இன்று ஒவ்வொரு தேடலுக்கும் கூகுளை நாடுகிறோம். கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக சுந்தர் பிச்சை என்பவர் பொறுப்பேற்றிருக்கிறார் என்கிற தகவல் வெளியானது தான் தாமதம், உலக நாடுகள் எல்லாம் அதே கூகுளில், ‛யார் இந்த சுந்தர் பிச்சை...’ என, தேட ஆரம்பிக்கிறார்கள். எதுவும் சிக்கவில்லை. கரப்பூரில் படித்த தகவல் மட்டும் கிடைக்கிறது. சம்மந்தப்பட்ட கரக்பூர் இந்திய தொழில்நுட்ப கழகத்தை தொடர்பு கொண்டு, சுந்தர் பிச்சை பற்றி கேட்கிறார்கள். அப்படி ஒருவர் இருந்ததாகவே அவர்களுக்கு தெரியவில்லை. தேடியவர்களுக்கு ஏமாற்றம். ஓய்வு பெற்ற பேராசிரியர் ஒருவர்,‛ சுந்தர் பிச்சை என்கிற மாணவன் இருந்தான், பரிசுகள் வாங்கினான்...’என்கிற தகவலை நினைவு கூற, அதன் பிறகு தான் இந்தியர் சுந்தர் பிச்சை உலக தேடலில் இடம்பிடித்தார், இடம் பிடித்துக் கொண்டிருக்கிறார். 




எல்லாம் கூகுள் மயம்... கூகுளோ... சுந்தர் மயம்!


2004ல் கூகுளில் இணைந்த சுந்தர் பிச்சை, வாடிக்கையாளர் மென்பொருள் தயாரிப்பு தொகுப்பில் முக்கிய பங்காற்றினார். உழைப்பு ஒருவனை உயர்த்தும் என்பதற்கு சரியான உதாரணம் சுந்தர் பிச்சை. 2013 மார்ச் 13ல் ஆன்டி ரூபின் பதவி விலகிய பிறகு, கூகுளின் ஆண்ட்ராய்டு பிரிவுக்கு தலைவரானார் . கூகுள் மேப், ஆய்வு, வணிகம், விளம்பரம், ஆண்ட்ராய்டு, குரோம், உள்கட்டமைப்பு, ஆப்ளிகேஷன்கள் என கூகுளின் சகலத்திற்கும் தலைவராக இருந்ததால், கூகுளின் சகலகலா வல்லவன் சுந்தர் பிச்சை. 2019 டிசம்பர் 5 ல் ஆல்ஃபாபெட் நிறுவனத்தின் தலைவர்களாக இருந்த லாரி பேஜ் மற்றும் சேர்ஜி பிரின் ஆகியோர் விலகிய பிறகு, இரு நிறுவனங்களுக்கும் ஒற்றை தலைமை ஆனார்.  




எதையும் தேடவில்லை... எல்லாம் தேடிவந்தது!


 சுந்தர் பிச்சை, தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தியவர். அதே சமயத்தில், அனுபவங்களை அடுத்த இடத்திற்கு கடத்தாமல்,ஒரே நிறுவனத்தில் தன் அனுபவத்தை பகிர்ந்தவர். உலக மென்பொருள் ஜாம்பவான் ஆன மைக்ரோசாப்ட், சமூக வலைதளத்தின் சக்கரவர்த்தியான ட்விட்டர் போன்ற நிறுவனங்கள் எல்லாம் சுந்தர் பிச்சையை தன் வசமாக்க முயன்றன. அதற்காக பெரும் விலை தரவும் தயாராகினர். ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை  சுந்தர். கூகுள் தான் தனது எதிர்காலம் என்பதில் உறுதியாக இருந்தார் . இன்று கூகுளின் எதிர்காலத்தை அவர் கவனித்துக் கொண்டிருக்கிறார். 43 வயதில் கூகுள் போன்ற பெரு நிறுவனத்தில் ஒரு தமிழன், தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்ற பிறகு தான், தமிழர்களின் சிறப்பை உலக நாடுகள் உற்று நோக்க ஆரம்பித்தன.  எதையும் அவர் தேடிச் செல்லவில்லை, எல்லாம் அவரை தேடி வந்தது. 2004ல் இருந்து பயணிக்கும் சுந்தர் பிச்சையின் கூகுள் பயணம், சக பயணியாக இருந்து, பைலட்டாக மாறிய கதை தான். தேடுதல் அலாதியானது. நம்மை எல்லாம் தேட வைத்த அலாதிக்கு சொந்தக்காரர் சுந்தர். கூகுள் இல்லாத வாழ்க்கை எப்படி சாத்தியமில்லையோ... அப்படி தான் சுந்தர் இல்லாத தமிழர் சிறப்பும்! தமிழுக்கும், தமிழருக்கும், இந்தியாவிற்கும் புகழ் சேர்த்த சுந்தர் பிச்சை இன்னும் புகழ்பெற, அவரது பிறந்த நாளில் வாழ்த்துகிறது ABP நாடு!


மேலும் படிக்க:


Sundar Pichai Income: டாலர்கள் சரணடைந்த சுந்தர் பிச்சையின் தனி சர்க்கார்!


Sundar Pichai Birthday: பெர்த்டே பாய் சுந்தர் பிச்சையின் இன்னொரு உலகம் இது!