செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தின் காட்ஃபாதர் என அழைக்கப்படும் ஜாஃப்ரி ஹிண்டன் கூகுள் நிறுவனத்தில் இருந்து தனது பதவியை ராஜனாமா செய்துள்ளார். தனது மனசாட்சிக்கு நியாயமாக இருக்க விரும்புவதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார் அவர்.


ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் தொடக்கப்புள்ளி:


ஜாஃப்ரி ஹிண்டன் கடந்த 2012 ஆம் ஆண்டு தொடங்கிய ஒரு சிறு ஆராய்ச்சி தான் இன்று ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் மாபெரும் வளச்சிக்கு தொடக்கப் புள்ளியாக அமைந்தது. ஆனால் இன்று அவர் கூகுளில் இருந்து வெளியேறியதற்கான காரணமாக தெரிவித்த தகவல் மிகவும் அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக உள்ளது.


அண்மைக்காலங்களில் ஏஐ என்று சொல்லப்படும் செயற்கை நுண்ணறிவு மனிதர்களுக்கு ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகளை பல முக்கியமான ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை தெரிவித்து வருகிறார்கள். எலான் மஸ்க் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை அனு ஆயுதத்திற்கு நிகரான ஆபத்தானது என்று தெரிவித்திருந்த நிலையில், தற்போது கூகுள் நிறுவனத்தில் பணியாற்றிய ஏ.ஐ.தொழில்நுட்பத்தின் காட்பாதர் என்று அழைக்கப்பட்ட ஜாஃப்ரி ஹிண்டன் தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார்.


இதற்கான காரணமாக அவர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜாஃப்ரி ஹிண்டன் "செயற்கை நுண்ணறிவு மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும். சாத்தியங்கள் இருப்பதால் தனது மனசாட்சி அதனை ஆதரிக்க மறுக்கிறது" என்பதால் தனது வேலையை ராஜினாமா செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன?


ஆர்டிஃபிசியல் இண்டெலிஜன்ஸ் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் என்பது மனிதர்களுக்கு நிகராக சிந்திக்கக் கூடிய ஒரு இயந்திரம். மனிதர்கள் எந்த அடிப்படையில் சிந்திக்கிறார்கள்? எதன் அடிப்படையில் உணர்ச்சிவசப்படுகிறார்கள்? ஆகிய அனைத்து தரவுகளும் இதற்கு ப்ரோகிராம் செய்யப்பட்டிருக்கும்.


அண்மைக்காலங்களில் இந்த தொழில்நுட்பம் மிகப்பெரும் வளர்ச்சியை அடைந்திருக்கிறது. கடந்த ஆண்டு நடந்த ஒரு சோதனையில் ஏ.ஐ. ஒன்று ஒரு சிறுகுழந்தையைப் போலவே தனது உணர்வுகளை வெளிப்படுத்தியதாக கூறினார் அதனுடன் உரையாடிய ப்ளேக் லெமோயின்.


செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி மனிதர்களுக்கு பல வகைகளில் பயன்படும் என்றாலும் அது மனிதர்கள் ஆபத்துகளை உண்டாக்கும் சாத்தியங்கள் அதிகம் இருப்பதாக அறிவியலாளர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். செயற்கை நுண்ணறிவு மனிதர்களின் வேலை வாய்ப்புகளை பறிக்கக் கூடிய நிலையை உருவாக்கும் என்பது பெரும்பான்மையானவர்களின் வாதமாக இருக்கிறது.


செயற்கை நுண்ணறிவு:


மனிதர்கள் முக்கிய பங்கு வகிக்கும் எல்லாத் துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு அவர்களுக்கு மாற்றாக அமையும் அபாயம்  உள்ளதாக அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.ஏஐ தொழில்நுட்பம் சார்ந்த எல்லாம் ஆராய்ச்சிகளையும் சிறிது காலத்திற்கு நிறுத்தி வைக்க வேண்டும் என தற்போது பொதுவில் பேச்செழுந்து உள்ளது. இந்த நிலையில் டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளரான எலான் மஸ்க் தனக்கு சொந்தமான ஏஐ ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றை தொடங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.