பேஸ்புக் நிறுவனத்தால் நடத்தப்பட்டு வரும் வாட்ஸ் அப் செயலி விரைவில் பயனர்களிடம் அடையாள ஆவணங்களை கேட்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


வாட்ஸ் செயலியின் v2.21.22.6 என்ற வெர்சனில் பல்வேறு புதிய மாறுதல்கள் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இந்த வெர்சனுடைய பீட்டா வெர்சனை பயன்படுத்தியவர்கள் புதிய மாறுதல்களை கண்டறிந்து இருக்கிறார்கள். ஆன்லைன் மூலம் பணப் பரிமாற்றம் செய்ய உதவியும் கூகுள் பே, போன் பே, பேடி எம் போன்ற யு.பி.ஐ. செயலிகளுக்கு போட்டியாக வாட்ஸ் அப் பே என்ற வசதியை கொண்டு வந்தது பேஸ்புக் நிறுவனம்.


ஆனால் அது இந்தியாவில் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. இந்த நிலையில் இதை முழு வீச்சில் அமல்படுத்தி பயனர்களின் நற்பெயரை பெற விரும்பிய பேஸ்புக் நிறுவனம் மற்ற செயலிகளில் இருந்து வாட்ஸ் அப் பேவில் பல்வேறு புதிய அம்சங்களை கொண்டு வர உள்ளது.


இதை பயன்படுத்துவதற்காக அடையாள ஆவணங்கள், வங்கிக் கணக்கு ஆவணங்களை வாட்ஸ் அப் நிறுவனம் கட்டாயப்படுத்த வாய்ப்புகள் உள்ளதாக பேச்சு அடிபடுகிறது. தற்போது பயன்பாட்டில் உள்ள வாட்ஸ் அப் பேவில் பயனர்களிடம் மொபைல் எண் மூலம் ஓ.டி.பி. உறுதி பெற்று வங்கிக் கணக்கில் பரிவர்த்தனை செய்ய அனுமதிக்கப்படுகிறது.


பிரேசிலில் வாட்ஸ் அப்புக்கு பதிலாக பேஸ்புக் பே என்ற செயலி செயல்பாட்டில் இருந்து வருகிறது. இதை பயன்படுத்துவதற்கும் வங்கி கணக்கில் இணைக்கப்பட்டுள்ள செல்போன் எண்ணுக்கு ஓடிபி எண் அனுப்பி உறுதிபடுத்திய பிறகு பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது. ஆனால் பேஸ்புக் பேவிலும் வாட்ஸ் அப் பே போல் பல்வேறு மாறுதல்கள் கொண்டு வரப்படலாம் என தொழில்நுட்ப ஆய்வாளர்கள் கணித்து உள்ளனர்.


ரிசர்வ் வங்கியின் விதிகளின்படி கூகுள் பே, போன்பே, பே டிஎம் போன்ற மொபைல் பரிவர்த்தனை செயலிகள் KYC மூலம் உறுதிபடுத்திய பிறகு பண பரிவர்த்தனை மேற்கொள்ளவும், வங்கிக் கணக்கை கையாளவும் அனுமதிக்கின்றன. இதற்கு ஒரு படி மேல் சென்று வாட்ஸ் அப் பே-ஐ பயன்படுத்த தனி நபர் விபரங்களை பேஸ்புக் கோர உள்ளதாக கூறப்படுகிறது.


சாதாரண வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தும் மக்களுக்கு இதில் விலக்கு அளித்தாலும், வாட்ஸ் அப் பிஸினஸ் செயலியை பயன்படுத்துபவர்கள் அடையாள ஆவணங்களை சமர்பிப்பது கட்டாயமாக்கப்படும் என தொழில்நுட்ப வட்டார்ங்கள் தெரிவிக்கின்றன.  ஆனால் இது குறித்து பேஸ்புக், வாட்ஸ் அப் நிறுவனங்கள் தரப்பில் அதிகாரப்பூர்வமாக எந்த தகவல்களும் வரவில்லை. வாட்ஸ் அப்பின் புதிய வெர்சனை அறிமுகம் செய்துவிட்டு இந்த அறிவிப்பை பேஸ்புக் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.