பிரபல சமூக ஊடக நிறுவனமான ட்விட்டருக்கும் மத்திய அரசுக்கும் இடையே உரசல் போக்கு இருந்துவரும் நிலையில், ஒட்டுமொத்த சமூக ஊடகத் தரப்பின் மீது அரசின் பிடி இறுகிவருவதும் உறுதியாகியுள்ளது. இந்த ஆண்டில் ஜூன் முதல்வாரம் வரை, நாடளவில் சமூக ஊடகங்களில் இடப்பட்ட பதிவுகளை நீக்கவேண்டும் என அந்த நிறுவனங்களுக்கு மத்திய அரசு 6 ஆயிரம் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. கடந்த ஆண்டில் மொத்தமே 9,800 உத்தரவுகள்தான் இப்படி அனுப்பப்பட்டுள்ளன. அதற்கு முந்தைய ஆண்டில் 3,600 நீக்க உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு இருக்கின்றன. பெரும்பாலும் இவை ட்விட்டர், முகநூல், இன்ஸ்டாகிராம், யூட்யூப் ஆகிய சமூக ஊடக நிறுவனங்களே இந்த உத்தரவுகளை எதிர்கொண்டுள்ளன.  



பெரும்பாலும் நீக்கப்பட வேண்டியவையாக அரசுத் தரப்பு குறிப்பிடும் போஸ்ட்டுகள், பொது ஒழுங்கை (சட்டம் ஒழுங்கை அல்ல) சீர்குலைப்பதாக இருப்பதாகவும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 69(அ)-வை மீறுவதாக இருப்பதாகவும் காரணம் கூறப்படுகிறது. அண்மையில் நடந்துவரும் விவசாயிகள் போராட்டம், காஷ்மீர் விவகாரம், பஞ்சாப் காலிஸ்தான் பிரிவினைவாதம், கொரோனா தொற்றை அரசு கையாளும் விதம் ஆகியன தொடர்பாகவே, இந்த ’ஆட்சேபணை’க்கு உரிய பதிவுகள் இருக்கின்றன. இதுவரை முகநூல், ட்விட்டர், யூட்யூப், வாட்சாப், பின் இண்ட்ரெஸ்ட், டெலிகிராம் ஆகிய நிறுவனங்களுக்கு இப்படியான போஸ்ட்களை நீக்கும் உத்தரவுகள் அனுப்பப்பட்டுள்ளன என்கின்றனர் தகவல்தொடர்புத் துறை அதிகாரிகள்.


தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 69(அ) பிரிவு, பொது ஒழுங்கையோ இந்திய இறையாண்மை, ஒற்றுமை, இராணுவம், அரசின் பாதுகாப்பு, அயல் நாடுகளுடன் நட்பு ஆகியவற்றுக்கு அச்சுறுத்தலாக சமூக ஊடகப் பதிவுகள் இருந்தால், அவற்றுக்கு எதிராகவும் அந்தக் கணக்கு மீதும் நடவடிக்கை எடுக்க அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது. இந்த நிலையில் வாட்சாப், முகநூல், கூகுள் ஆகிய நிறுவனங்கள் தங்களின் முறையீட்டு அலுவலர், இருப்பிட முறையீட்டு அலுவலர், அதிகாரப்பூர்வ தொடர்பு அதிகாரி ஆகியோரின் விவரங்களை வெளியிட்டுள்ளன. ஃபேஸ்புக் எனப்படும் முகநூல் நிறுவனம் இந்தியாவுக்கான முறையீட்டு அலுவலராக ஸ்பூர்த்தி பிரியா என்பவரை நியமித்துள்ளது.  


மத்திய அரசுத் தரப்பிலும் சமூக ஊடகப் பதிவுகளையும் கணக்குகளையும் தடைசெய்வதற்காகவே ஓர் அலுவலரை அதிகாரப்பூர்வமாக நியமித்துள்ளனர். இப்போது ஆதார் அட்டை அமைப்பின் துணை தலைமை இயக்குநராக பிரணாப் மொகந்தி பணியாற்றிவருகிறார். மத்திய சட்டம் மற்றும் நீதி, உள்விவகாரங்கள், தகவல் மற்றும் ஒளிபரப்பு ஆகிய அமைச்சகங்கள், கணினி அவசரகால செயல்பாட்டுக்கான இந்தியக் குழு ஆகியவற்றின் அலுவலர்களுடன் கூடி ஆலோசனை நடத்துவார். இந்தக் குழுவானது மத்திய, மாநில அரசுகளின் முகமைகள் அளிக்கும் கோரிக்கைகளைப் பரிசீலித்து முடிவெடுக்கும்.  


இப்படியான கோரிக்கைகளை ஏற்று அவற்றை அந்தந்த சமூக ஊடகங்களுக்கு அனுப்புவது, அதிகாரப்பூர்வ அலுவலரின் பணி. கடந்த ஆண்டில் மட்டும் 9,849 இணைய முகவரிகள்/ கணக்குகள்/இணையப் பக்கங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. இதுவே, 2019ஆம் ஆண்டில் 3,603, 2018-ல் 2,799, 2017-ல் 1,385 என தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு, அவை நீக்கப்பட்டும் உள்ளன. இதில், முகநூலுக்கு 1,717 ஆணைகளும், ட்விட்டருக்கு 2,731 ஆணைகளும் தரப்பட்டுள்ளன.


சீன நாட்டுடனான உறவில் கசப்பு ஏற்பட்டதை அடுத்து, அந்த நாட்டைச் சேர்ந்த டிக்டாக் முதலிய 250 செயலிகளுக்கு மத்திய அரசு தடைவிதித்தது, நினைவிருக்கும். அதையடுத்து விவசாயிகள் போராட்டம் தொடர்பாக, ட்விட்டரில், பிரதமரைக் கோத்துவிட்டு பதியப்பட்ட தகவல்கள், கருத்துகளை நீக்குமாறு அரசு கூறியது. அது, பொது ஒழுங்குக்கு அச்சுறுத்தல் என மத்திய அரசு தெரிவித்தது. அதையடுத்து, குறிப்பிட்ட பதிவுகளை அணுகமுடியாதபடி செய்த ட்விட்டர் நிறுவனம், அதை நீக்க மறுத்துவிட்டது. அது, குறிப்பிட்ட பதிவுகளை இட்ட செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்களின் பேச்சுரிமையைப் பறிப்பதாக இருக்கும் என அந்த நிறுவனம் விளக்கம் கூறியது. ட்விட்டரில் 257 கணக்குகளை தடைசெய்யுமாறும் 1178 பேரின் பதிவுகளை நீக்குமாறும் அரசு கூறியது. ஆனால் இதை ஏற்க ட்விட்டர் மறுத்ததால் இரு தரப்புக்கும் இடையே 2 மாதங்களாக பிரச்னை நீடித்துவருகிறது. இதில் கடந்த ஏப்ரலில் மத்திய அரசு தடைசெய்யக் கூறிய 100 கணக்குகளில், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் முகநூல் பக்கமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.