இங்கிலாந்து லண்டனில் நடக்கும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியானது மிகவும் பழமையான மற்றும் மரியாதைக்குரிய தொடராகும். 1877ம் ஆண்டுமுதல் நடைபெற்றுவரும் இப்போட்டித்தொடர் ஆண்டுதோறும் ஜூன் மாதக்கடைசியில் தொடங்கி ஜுலை மாதம் முடிவடையும். ஆனால், இந்த ஆண்டு ஜூலையில் தொடங்குகிறது. இந்த போட்டி 146 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. இந்த ஆண்டு 136வது விம்பிள்டன் போட்டி நடைபெறவுள்ளது. 2 ம் உலகப் போர் மற்றும் 2020 ஆம் ஆண்டு கொரோனா காரணமாக, போட்டியை ஏற்பாடு செய்ய முடியவில்லை. 


ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓப்பன், பிரெஞ்சு ஓப்பன், விம்பிள்டன், அமெரிக்க ஓப்பன் ஆகிய டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் என்ற 4 போட்டிகள் நடைபெறுகின்றன. 1988-ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய ஓப்பன் கடின தரை ஆடுகளத்துக்கு மாறியபிறகு, இன்று வரை விம்பிள்டன் மட்டுமே புல்தரையில் ஆடப்படும் ஒரே கிராண்ட்ஸ்லாம் போட்டித் தொடராக உள்ளது. 


ஆனால் இந்தப் போட்டியின் பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா? விம்பிள்டனின் பரிசுத் தொகை மற்றும் அது தொடர்பான சுவாரஸ்யமான உண்மைகளை இன்று தெரிந்து கொள்வோம். 


பரிசுத் தொகை: 


கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சுமார் 11 சதவீதம் கூடுதல் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற இருவருக்கும் சுமார் ரூ.24.49 கோடி பரிசுத் தொகை கிடைக்கும். இது தவிர, இரண்டாம் இடம் பெறும் அணிக்கு ரூ.12.25 கோடி பரிசுத் தொகை கிடைக்கும். ஒட்டுமொத்தமாக இந்த ஆண்டு போட்டியில் சுமார் 465 கோடி ரூபாய் வழங்கப்ட இருக்கிறது.


கடந்த ஆண்டு, ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் சுமார் 20.85 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.  ஆனால், 1968-ம் ஆண்டுக்கு முன்பு விம்பிள்டனில் பரிசுத் தொகை எதுவும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


146 ஆண்டுகளாக மாறாத கோப்பை: 


 1968 ஆம் ஆண்டு விம்பிள்டன் அதிகபூர்வமாக உருவாக்கப்பட்டது. அந்த ஆண்டு பெண்களை விட ஆண்களுக்கு 3 சதவீதம் அதிகமாக கொடுக்கப்பட்டது. இது கடந்த  2007ம் ஆண்டு வரை தொடர்ந்தது. அதன்பிறகு கடந்த 2008ம் ஆண்டு முதல் மாற்றங்கள் செய்யப்பட்டன. அதன்படி, கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் இரு பிரிவு வீரர்களுக்கும் சமமாக பரிசுத்தொகை வழங்கப்பட தொடங்கியது. 


கடந்த 1887-ம் ஆண்டு முதல் விம்பிள்டனில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் வெற்றி பெறுவோருக்கு கோப்பை வழங்கப்படுகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் வெற்றி பெறுபவர் 18.5 அங்குல உயரமும் 7.5 அங்குல அகலமும் கொண்ட கோப்பையைப் பெறுவார்கள். அந்த கோப்பையின் நகலே வெற்றியாளருக்கு வழங்கப்படுகிறது. இந்த கோப்பையில் முந்தைய சாம்பியன் வீரர்களின் பெயர் இடம்பெற்று இருக்கும். அதே நேரத்தில் உண்மையான கோப்பை ஆல் இங்கிலாந்து கிளப்பின் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.