அக்டோபர் மாதம் மெல்பர்னில் நடக்கவிருக்கும் இந்தியா- பாகிஸ்தான் இடையே நடக்கும் டி20 கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.


இந்திய-பாகிஸ்தான் இடையே போட்டி:


கடந்த 2020ம் ஆண்டு முதல் விதிக்கப்பட்ட கடுமையான கொரோனா கட்டுப்பாடுகளுக்குப் பிறகு உலகம் மெல்ல மெல்ல இயல்புநிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது. கிரிக்கெட் போட்டிகளைப் பார்க்க ரசிகர்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கபப்ட்டிருந்த நிலையில் தற்போது முழுவதுமாக அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் வரும் அக்டோபர் மாதம் 23ம் தேதி ஆஸ்திரேலியாவின் மெல்பர்னில் நடக்கவிருக்கும் இந்தியா பாகிஸ்தான் இடையிலான டி20 கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத்தீர்ந்துவிட்டதாக ஆஸ்திரேலியா சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.




டிக்கெட்டுக்கு டிமாண்ட்:


வரும் அக்டோபர் மாதம் 16ம் தேதி முதல் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிகள் தொடங்குகின்றன. இதுவரை நடைபெற்றுள்ள டிக்கெட் விற்பனையில் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டிக்கான டிக்கெட்டிற்கும், நவம்பர் 13ம் தேதி நடைபெறவிருக்கும் இறுதிப்போட்டிக்கும் அதிக டிமாண்ட் இருந்ததாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பெரும்பாலான டிக்கெட்களுக்கான டிமாண்ட் இந்தியாவில் இருந்தே வந்ததாக கூறியுள்ளது.




சில நிமிடங்களில் விற்பனையான டிக்கெட்டுகள்:


இதுவரை விற்பனையாகியுள்ள டிக்கெட்டுகளில் 40 சதவிகிதம் டிக்கெட்டுகள் இந்தியாவிலிருந்தே வாங்கப்பட்டுள்ளதாகவும், 27 சதவீதம் டிக்கெட்டுகள் தென்அமெரிக்காவில் இருந்தும், தொடரை நடத்தும் ஆஸ்திரேலியாவில் 18 சதவீதம் டிக்கெட்டுகளும், இங்கிலாந்து மற்றும் இதர நாடுகளில் உள்ள ரசிகர்களிடம் இருந்து 15 சதவிகிதம் டிக்கெட்டுகள் வாங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் மெல்பர்னில் உள்ள ஹோட்டல் அறைகள் ஏற்கனவே புக்கிம் செய்யப்பட்டுவிட்டதாகவும், இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போட்டியைப் பார்க்க சுமார் 45 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரசிகர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்ப்பதாக ஆஸ்திரேலிய நிர்வாகம் கூறியுள்ளது. இப்போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துவிட்டதாகவும், விஐபிக்களுக்கான டிக்கெட் மட்டும் இன்னும் இருப்பதாகவும் டிக்கெட் விற்பனை செய்யும் நிறுவனமான குளோபல் ஸ்போர்ட்ஸ் ட்ராவல் கூறியுள்ளது.




பவுண்டரி க்ளப் டிக்கெட்டுகள்:


ஐசிசி அறிமுகப்படுத்தியுள்ள பவுண்டரி க்ளப் வகையைச் சேர்ந்த 300 டிக்கெட்டுகளும் இந்த வாரம் விற்றுத்தீர்ந்துவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கு அடுத்து அதிக டிமாண்ட் இருப்பது, இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையில் பெர்த்தில் நடைபெறும் போட்டிக்கு தான் என்றும் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் இந்திய அணி விளையாடும் அனைத்துப் போட்டிகளுக்குமான டிக்கெட்டுகளும் விற்றுத்தீர்ந்துவிடும் என்று எதிர்பார்ப்பதாக ஆஸ்திரேலிய நிர்வாகம் கூறியுள்ளது.